சிங்கப்பூர் பறந்த துரைமுருகன்; திடீர் பயணமா? திட்டமிட்ட பயணமா? ரகசியம் என்ன?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தை அடுத்து திடீரென்று அமைச்சர் துரை முருகன் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டது எதற்காக என்பது பற்றிய தகவல் இப்போது அறிவாலய வட்டாரத்திலிருந்து கிடைத்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு முதலீடுகளை ஈர்க்கப் போகிறார் என்ற செய்தி சில மாதங்களாகவே அரசியல் வட்டாரத்தில் அடிப்பட்டு வந்தது. அதற்காக விசா, பிரதமர் அலுவலக அனுமதி எனப் பல நடைமுறைகளை முன்கூட்டியே தமிழக அரசு செய்துவிட்டதால், அதன் மூலம் மோப்பம் பிடித்த பாஜக நிர்வாகிகள் அமெரிக்கப் பயணம் பற்றி முன்கூட்டியே வாய் திறக்க தொடங்கிவிட்டனர்.

அதை வைத்துத்தான் எடப்பாடி பழனிசாமி முதல்வரின் அமெரிக்கப் பயணம் பற்றி அரசியல் ரீதியாக சில விமர்சனங்களை வைத்துவந்தார். இப்போது ஸ்டாலின் பயணம் பற்றி விமர்சனம் செய்யும் எடப்பாடி பழனிசாமி, அவரது ஆட்சிக்காலத்தில் முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றவர்தான் என்பதைப் பலரும் மறந்து இருக்க முடியாது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 27ஆம் தேதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கே அவர் போடும் ஒப்பந்தங்கள் என்ன? அவர் பங்கேற்கும் விழாக்கள் என்ன? மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விசிட் என அடுத்தடுத்து அப்டேட்ஸ் அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோவாக வெளியாகி வருகின்றன. ஆக, ஸ்டாலின் அமெரிக்கப் பயணம் என்பது சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டதுதான்.
ஆனால், அதில் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று நடந்துள்ளது. இந்தப் பக்கம் அமெரிக்காவுக்கு ஸ்டாலின் விமானம் ஏறியவுடன் மற்றொரு பக்கம் சிங்கப்பூருக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார் அமைச்சர் துரைமுருகன். கடந்த 1 ஆம் தேதி இவர் சிங்கப்பூர் சென்றார்.
கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் ரஜினி கொஞ்சம் ரசாபாசமாகப் பேச அது காமெடியாக தொடங்கி அவர் விட்ட அம்பு நேராகப் போய் துரைமுருகனைத் தாக்கிவிட்டது. சீனியர் விவகாரம் பற்றி ரஜினி சீரியசாக பேசுகிறாரா? இல்லை சிரிப்புக்காகப் பேசுகிறாரா? என்பது புரியாமல் உடன் பிறப்புகள் பலரும் வெள்ளந்தியாக விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கும்போது, மறுநாள் அது பற்றி ஆவேசமாகப் பேசி ரஜினியை கிழ நடிகர் என்று மறைமுகமாக தாக்கினார் துரைமுருகன். அதன்பின்னர் 'நகையாக எடுத்துக் கொண்டேன். பகையாகப் பார்க்கவில்லை' என்று விளக்கம் கொடுத்தார். அதற்கு ரஜினியும் அதற்குப் பெருந்தன்மையாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் முதல்வர் அமெரிக்கா விமானம் ஏறும் அவரை அவர் மனதிலிருந்தது. ஆகவேதான் அவர் ஃப்ளைட் ஏறுவதற்கு முன்பாக ஒரு விளக்கம் கொடுத்துவிட்டுப் பறந்தார். அவர் போன சில நாட்களில் சிங்கப்பூர் பயணத்தை மேற்கொண்டு விட்டார் துரைமுருகன். கருணாநிதி தலைவராக இருந்த காலத்திலேயே பலமுறை துரைமுருகன் அவரிடம் மன வருத்தம் கொண்டது உண்டு. அதன்பின்னர், 'தொர தெரியாம பேசிட்டேன்' என்று கருணாநிதி பேசினால் உடனே மறந்துவிடக்கூடியவர் துரைமுருகன்.
ஆனால், அவரால் ரஜினி பேசிய விவகாரத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவே இல்லை என்கிறார்கள் அவரது விசுவாசிகள். அதனால்தான் ரஜினி மீது தனிப்பட்ட தாக்குதலை அவர் முன்வைத்தார். அதற்கு உடனடியாக ஸ்டாலினிடம் இருந்து கண்டிப்பு வந்துள்ளது. அடுத்த நாளே முதல்வரைச் சந்தித்து உருக்கமாக விளக்கம் கொடுத்துள்ளார் துரை முருகன். அப்போதே அவர் சிங்கப்பூர் செல்ல அனுமதி பெற்றுவிட்டார் என்கிறது அமைச்சரின் அலுவலக வட்டாரம்.
மேலும் இது திடீர் பயணம் எல்லாம் இல்லை. கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி உடல்நிலை சம்பந்தமாக அவர் டிக்கெட் போட்டு இருந்தார். ஆனால், கலைஞர் நாணய விழா வந்ததால் தள்ளிப்போனது. துரைமுருகன் இதய அறுவை சிகிச்சை செய்தவர். அவருக்கு ஆலோசனை வழங்கும் இதய அறுவை சிகிச்சையில் நிபுணர் டாக்டர் ஜெயராமன் சிங்கப்பூரில் தான் உள்ளார். அவரிடம் முன்பே அவர் அனுமதி பெற்று இருந்தார். இதய அறுவை சிகிச்சை பின் ஆண்டுக்கு ஒருமுறை மெடிக்கல் செக் அப் அவசியம். அதற்காகவே அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார் என்கிறார்கள் அறிவாலய அதிகாரிகள்.
கடந்த 1 ஆம் தேசி சிங்கப்பூர் சென்ற துரை முருகன் வரும் 4 ஆம் தேதி திரும்ப வருகிறார். இதற்கு இடையில் பல கனிமொழியும் அடுத்து விமானத்தில் சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் கலைஞர் நூல் வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்றார். இருவரின் பயணமும் தனித்தனியானது என்றும் சொல்கிறார்கள். முதலில் மருத்துவ ஆலோசனைக்காகச் சிங்கப்பூர் பயணம் செய்ய முடிவு செய்திருந்த துரை முருகன், சில மாதங்களாக துணை முதல்வர் பதவி பிரச்சினை உள்ளே புகைந்து கொண்டிருந்ததால் இது சரியான தருணம் இல்லை என்பதால் தள்ளிப் போட்டுள்ளார். இப்போது ஸ்டாலினும் இல்லை. முதல்வர் பதவி பிரச்சினையும் இல்லை என்பதால் விமானம் ஏறி இருக்கிறார் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications