திமுகவின் தீர்மான அம்பு.. முன்கூட்டியே ஊகித்த முதல்வர்.. அதிரடி காட்டி நமத்துப் போக வைத்த சமயோஜிதம்!
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பாக திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்து அது இறுதியில் தவிர்க்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசு மேற்கொள்ளும் பணிகள் பற்றி விவாதிப்பதற்காக திமுக தலைமையில் காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் முதலில் புதன்கிழமை 15-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் 14-ம் தேதி இரவு அதற்கு திடீரென அரசு தரப்பில் இருந்து முட்டுக்கட்டை போடப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்க மறுத்ததுடன் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தக் கூடாது என உறுதியாக கூறிவிட்டது.
இதனால் டென்ஷனான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியும் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியே தீர்வது என முடிவெடுத்தார். உடனடியாக கானொலிக் காட்சி மூலம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறியதோடு, அனைத்துக் கட்சி கூட்டத்தில் விஜயபாஸ்கர் தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் யோசனைக்கும் வந்துள்ளார். அதன்படி விஜயபாஸ்கரை ஒதுக்கி வைத்ததற்கான காரணத்தை முதல்வர் விளக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் சேர்க்கப்பட இருந்தது.
இதனை 15-ம் தேதி நண்பகலே தனது சோர்ஸ்கள் மூலம் அறிந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் சண்முகத்தை அழைத்து விஜயபாஸ்கரை பிரஸ்மீட் கொடுக்க கூறுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன்படி புதன்கிழமை மாலை நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரஸ்மீட் கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர், தனது பேட்டியில் 35-க்கும் மேற்பட்ட முறை ''மாண்புமிகு முதல்வர் அவர்கள்'' என்ற வார்த்தையை உச்சரித்தார்.
இதையடுத்து விஜயபாஸ்கர் பிரஸ்மீட் கொடுத்துவிட்ட நிலையில் அவர் தொடர்பான தீர்மானம் சரியாக இருக்காது எனக் கருதிய திமுக, அதை நீக்கிவிட்டு அதில் புதிதாக நிவாரண உதவிகளுக்கு தடையில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு என்ற தீர்மானத்தை இணைத்தது.