இதென்ன புதுக்கதை.. ‘இடைத்தேர்தல்?’ - எடப்பாடி போடும் 'மாஸ்டர்' பிளான்.. க்ளூ கொடுத்த உதயகுமார்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கையோடு, ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஈபிஎஸ் தரப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுமே ஓபிஸ் டீமை முழுமையாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார்.
அதோடு, ரவீந்திரநாத் அதிமுக எம்.பியே இல்லை என்றும் லோக்சபா சபாநாயகருக்கு லெட்டர் அனுப்பினார். ஓபிஎஸ் வகித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கும் ஆர்பி உதயகுமாரை அறிவித்தார்.
இந்நிலையில், வழக்குகள் காரணமாக கட்சி நிர்வாக நடவடிக்கைகள் தள்ளிவைத்த ஈபிஎஸ், பொதுச் செயலாளர் ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் “யார்” தெரியுமா? கறுப்பு “ஆடு” - எடப்பாடி பேச்சை கேட்டு தொண்டர்கள் “விசில்”
வடக்கு.. 'பெரிய பிளான்’.. கனிமொழி மூலம் ஸ்டாலின் போடும் கணக்கு.. காங். சிக்னல்.. பாஜகவுக்கு சிக்கல்!
முழுமையாக ஒழித்துக்கட்ட
ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் அதிமுகவிலிருந்து பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அதேபோல, மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகிய எம்.எல்.ஏக்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து எம்.பி ரவீந்திரநாத் உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் வகித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பறிக்கவும் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தார் ஈபிஎஸ்.
3 எம்.எல்.ஏ + 1 எம்.பி
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்.பியே இல்லை என்றும் லோக்சபா சபாநாயகருக்கு லெட்டர் அனுப்பினார். ஆனால், அதனை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதும் ரவீந்திரநாத் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார். அதேபோல, ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்களின் சீட்களையும் மாற்ற வேண்டும் என்றும் திட்டமிட்டார் ஈபிஎஸ். ஆனால், ஓபிஎஸ் வேண்டுகோள் காரணமாக இதுவரை சபாநாயகர் அப்பாவு அதில் எந்த முடிவும் எடுக்கவில்லை.
பொதுச் செயலாளர் தேர்தல்
இந்நிலையில், பொதுக்குழுவில் அறிவித்தபடி 4 மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவும் வழிமொழியவும் வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளால் ஓபிஎஸ்க்கு தேர்தலில் நிற்கவும் செக் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட பிளான்
இதற்கிடையே, 2532 பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரமாண பத்திரங்களையும் பெற்றுள்ளது ஈபிஎஸ் டீம். பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கவுள்ளனர். திட்டமிட்டபடி அடுத்த மாத இறுதிக்குள் பொதுச் செயலாளர் தேர்தலை முடிக்க முடிவு செய்துள்ளனர். பொதுச் செயலாளர் பதவிக்கு வந்ததுமே செய்யவேண்டிய பணிகள் பற்றியும் ஈபிஎஸ் டீம் ஆலோசித்து வருகிறதாம். அதில் முன் வரிசையில் இருக்கும் திட்டம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோருவது தானாம்.
தகுதி நீக்கம்?
கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் வகிக்கும் அரசு பதவிகளை நீக்க கட்சித் தலைவர் உரிமை கோரலாம். அந்தவகையில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், அணி தாவிய உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் ஆகிய 4 பேரின் எம்.எல்.ஏ பதவிகளையும் பறிக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சி முழு கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகுதான் இந்த நடவடிக்கையில் தீவிரமாக இறங்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் டீம் ஆலோசித்துள்ளதாம்.
ஈபிஎஸ் திட்டம்?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய எம்.எம்.ஏக்களோடு உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பனையும் தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டு வருவது பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளார் ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் உதயகுமார். நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் சிக்கல்கள் தீர்ந்தபிறகு தங்கள் பக்கம் இல்லாத எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஈபிஎஸ் கோருவார் என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் தான் உதயகுமார் அதிமுக பொதுக்கூட்டத்தில் இதுபற்றி பேசியுள்ளார்.
உதயகுமார் சூசகம்
உசிலம்பட்டியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்பி உதயகுமார், "உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் மாயமாகி உள்ளார். உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற அய்யப்பன் தகுதி நீக்கம் செய்யப்படுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாளைக்கே உசிலம்பட்டியில் இடைத்தேர்தல் வந்தாலும் வரும். அப்படி வந்தால் இரட்டை இலை தான் வெற்றி பெறும்." எனப் பேசினார். இதன் மூலம் ஈபிஎஸ் தரப்பின் திட்டம் ஊர்ஜிதமாகியுள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
நடக்குமா?
அதேசமயம், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எம்.எல்.ஏக்களாக இருக்கும் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால், ஈபிஎஸ் தரப்பால் அங்கு ஜெயிப்பது கடினம் தான், எனவே இந்த பகீரத முயற்சியில் இறங்கமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. தங்கள் அணியில் இருக்கும் மற்ற எம்.எல்.ஏக்களுக்கு 'கிலி' ஏற்படுத்தும் வகையில் ஈபிஎஸ் தரப்பே இப்படி விவாதங்களை ஏற்படுத்துவதற்காக கிளப்பி விட்டிருக்கலாம் என்றும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.