மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு! எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
சென்னை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் இன்று காலமான நிலையில், அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நெஞ்சுச் சளி காரணமாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார். இதற்கிடையே இன்று அவர் திடீரென மாரடைப்பால் காலமானார்.

பங்காரு அடிகளார் உடல் இப்போது அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், அரசியல் தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி: பங்காரு அடிகளார் மறைவு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவருமான பங்காரு அடிகளார் அவர்கள், தனது 82-ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
ஆசிரியராக பணியைத் தொடங்கிய பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி ஆன்மிக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, கோயில் கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை ஆன்மிகத்தில் செய்தவர். மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கி கல்வி சேவை ஆற்றியதோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு சேவை ஆற்றியவர். மனித குலத்திற்கு ஆற்றிய சேவைக்காக பத்ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அன்னாரது இழப்பு ஆன்மிக பக்தர்களுக்கு பேரிழப்பாகும்.
பக்தர்களால் அம்மா என வணங்கப்பட்ட பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், லட்சக்கணக்கான பக்தர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், பங்காரு அடிகளார் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்: அதேபோல டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக 'அம்மா' என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளாரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்" என்று தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவும், பக்தர்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான அருள்திரு. பங்காரு அடிகளார் இன்று மாலை மாரடைப்பால் முக்தி அடைந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
பங்காரு அடிகளார் என் மீது தனிப்பாசம் கொண்டவர். எனது நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். கடந்த சில வாரங்களுக்கு முன் பங்காரு அடிகளாரை எனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். என்னையும், குடும்பத்தினரையும் வாழ்த்தி அனுப்பிய அவர், இவ்வளவு விரைவாக நம்மை விட்டு பிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை; அவரது மறைவு செய்தியை நம்ப முடியவில்லை. அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு ஆகும்.
பங்காரு அடிகளாருக்கு ஆயிரம் சிறப்புகள் உண்டு. அவற்றில் முதன்மையானதாக நான் கருதுவது அவர் மேற்கொண்ட ஆன்மிகப் புரட்சி தான். கருவறைக்குள் சாதாரணமானவர்கள் நுழையக்கூடாது; சில நாட்களில் பெண்கள் கோயிலுக்குள் நுழையவே கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு இருந்த காலத்தில், 45 ஆண்டுகளுக்கு முன்பே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை நிறுவி, அதில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம்; அவர்கள் கருவறைக்கே சென்று வழிபாடு செய்யலாம் என்ற நடைமுறையை ஏற்படுத்தியவர். தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் ஆதிபராசக்தி மன்றங்களை நிறுவி, அவற்றின் தலைவர்களாக பெண்களை அமர்த்தி, அவர்களை தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வந்து அழகு பார்த்தவர் பங்காரு அடிகளார்.
பங்காரு அடிகளாரை உலகில் 25&க்கும் கூடுதலான நாடுகளில் பக்தர்கள் உள்ளனர். ஆன்மிகவாதி என்பதைக் கடந்து பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி, கிராமப் புற மக்களுக்கும் கல்வி வழங்கியவர் அவர். ஏழைகளுக்கு உதவி, இயற்கைப் பாதுகாப்பு என பல்வேறு வழிகளில் சமுதாயத் தொண்டுகளையும் செய்து வந்தவர் பங்காரு அடிகளார்.
பங்காரு என்றால் தங்கம் என்று பொருள். தமது பெயரின் பொருளுக்கு ஏற்ப தமது வாழ்நாளில் தங்கமான மனிதராகவே வாழ்ந்து மறைந்தவர் அவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தைச் சேர்ந்தவர்கள், அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள், உலகெங்கும் உள்ள பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications