தூக்குறது இருக்கட்டும்.. அவசரத்துல உங்க ஆளையே மாத்தி நீக்கிடாதீங்க.. ஓபிஎஸ் அறிக்கை தவறால் கிண்டல்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை நீக்கி ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகளில் இருந்த தவறான தகவல்களை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Recommended Video
அதிமுகவில் தங்களுக்கு எதிரான நிர்வாகிகளை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அடுத்தடுத்து நீக்கி வருவதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.
முதலில் ஈபிஎஸ் தரப்பு 4 பேரை பொதுக்குழுவில் வைத்தே நீக்கியது. பின்னர் 18 பேரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பதிலடியாக ஓபிஎஸ் 22 பேரை நீக்கினார். மேலும் 44 பேரை நேற்று கட்சியில் இருந்து நீக்கினார். இதையடுத்து ஈபிஎஸ், மேலும் 21 ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார்.

அதிமுக மோதல்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அடுத்து 18 பேர்
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப், 5 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்குப் போட்டியாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ் அறிவித்தார்.

தேதி தவறாக
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை நீக்கம் செய்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட 3 பக்க அறிக்கையின் மேல் குறிப்பிடப்பட்டு இருக்கும் நாளில் 14.07.2021 என்று குறிப்பிட்டப்பட்டு இருந்தது. தற்போது 2022ஆம் ஆண்டு நடந்து வரும் நிலையில் தேதியில் ஓ.பன்னீர்செல்வம் தவறாக பழைய வருடத்தைக் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளானது.

44 பேரை நீக்கிய ஓபிஎஸ்
இதையடுத்து மேலும் 44 பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி நேற்று உத்தரவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, பெஞ்சமின், கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.பி.அன்பழகன், பரஞ்சோதி, காமராஜ், கே.வி.ராமலிங்கம், கே.சி.கருப்பணன், சண்முகநாதன், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட 44 எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதுவரை 66 பேர் ஓபிஎஸ்ஸால் நீக்கப்பட்டுள்ளனர். ஈபிஎஸ் தரப்பு 43 பேரை நீக்கியுள்ளது.

இந்த அறிவிப்பிலும் பிழை
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ள மாவட்ட செயலாளர்களை நீக்கி, நேற்று ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட பட்டியலில், வட சென்னை தெற்கு - மேற்கு மாவட்ட செயலாளர் பாலகங்கா என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, தென் சென்னை தெற்கு - மேற்கு மாவட்ட செயலாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கவனித்த ஈபிஎஸ் தரப்பினர், எந்த நிர்வாகி எந்த மாவட்டம் என்பது கூட ஓபிஎஸ்ஸுக்கு தெரியவில்லை. இந்த நிலையில் தான் இவர் ஒருங்கிணைப்பாளராக இருந்தாரா என ஓபிஎஸ்ஸை விமர்சித்துள்ளனர்.

தென் சென்னை
தென் சென்னை தெற்கு - மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவியை முதல் நாளே நீக்கிவிட்டார் ஓபிஎஸ். அவரது பதவியைக் குறிப்பிட்டு பாலகங்காவை நீக்குவதாக அறிவித்துள்ளார். எடப்பாடி ஆதரவாளர்களை நீக்கும் அவசரத்தில் இதுபோல, தனது ஆதரவாளர்களாக இருக்கும் சொற்பமானவர்களையும் நீக்கிவிடப் போகிறார் ஓபிஎஸ் என கிண்டலடித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications