பூமராங்.. ஓபிஎஸ் வாதத்தையே அவருக்கு எதிராகத் திருப்பிய எடப்பாடி! “சுப்ரீம் பவர்”? அவரே சொல்லிட்டாரே!
சென்னை : எடப்பாடி பழனிசாமி தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துகளையே அவருக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளது. பொதுக்குழு அதிமுகவில் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பு என்பதை மனுதாரரே மறுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது விதிப்படி சரியானதுதான் என வாதிட்டுள்ளது ஈபிஎஸ் தரப்பு.
அதிமுக பொதுக்குழு வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை பரபரப்பாக நடைபெற்று முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதி நாள் விசாரணையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவு தரப்புகள் பரபர வாதங்களை முன்வைத்தன.
ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு முறையாக கூட்டப்பட்டதா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் தரப்பு, பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது ஓரளவு சரியானது தான் என்று தெரிவித்தது.

பெரும் படையையே இறக்கிய எடப்பாடி
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், அதிமுக தலைமைக்கழகம் சார்பாக வழக்கறிஞர்கள் வினோத் கண்ணா, சி.எஸ்.வைத்தியநாதன், பொதுக்குழு, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகிய தரப்புகள் சார்பாக வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, செயற்குழு சார்பில், அதுல் யஷ்வந்த் சின்ஹா, அதல் சிதலே, பாலாஜி சீனிவாசன், கௌதம் குமார் என ஒரு பெரும் படையையே இறக்கி வாதாடியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஓபிஎஸ் தரப்பு சார்பாக குரு கிருஷ்ணகுமார், வைரமுத்து சார்பாக ரஞ்சித்குமார் ஆகியோர் வாதாடினர். மூத்த வழக்கறிஞர்கள் பட்டாளத்தையே இறக்கி வாதாடி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

மனுதாரரே ஒப்புக்கொண்டார்
பொதுக்குழு தான் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பு என்பதை மனுதாரரே மறுக்கவில்லை. தனி நீதிபதி அளித்த எல்லை தாண்டிய ஸ்டேட்டஸ்கோ உத்தரவால் கட்சி செயல்பட இயலாத நிலை வந்தது. ஒன்றரை கோடி தொண்டர்களின் வாக்குகளை தேர்தல் மூலம் பெற்று ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் ஆகவில்லை. எனவே, ஒன்றரைக் கோடி தொண்டர்கள் மூலம் தேர்தல் நடத்தித்தான் தலைமைப் பதவிக்கு வர முடியும் என்பதே தவறான வாதம் என ஈபிஎஸ் தரப்பில் நேற்று வாதிடப்பட்டது.

நோட்டீஸ் பிரச்சனை
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் இணைந்தே செயல்பட்டார்கள் எனில் வைரமுத்து வழக்கில் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் எப்படி தன்னை மட்டும் தனி வாதியாக காட்ட இயலும்? சிவில் வழக்கில் ஒருவரே எப்படி வாதியாகவும் பிரதிவாதியாகவும் இருக்க இயலும்? நோட்டீஸ் என்பது எழுத்துப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என பொருள்கொள்ள வேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது என்றும் ஈபிஎஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாரும் புகார் சொல்லவில்லை
இந்த வழக்கில் ஜுன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த பொதுக்குழு ஜுலை 11ல் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது மனுதாரரும் அங்கு இருந்துள்ளார். மேலும் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. தனக்கு நோட்டீஸ் வரவில்லை என எவரும் புகார் அளிக்கவில்லை. எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். எனவே நோட்டீஸ் குறித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் குற்றச்சாட்டு தவறானது என ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

நியமித்ததே அவர்தானே
ஜுன் 23ஆம் தேதி அ.தி.மு.கவின் அவைத்தலைவர் தான் ஜுலை 11 பொதுக்குழுவுக்கான அறிவிப்பையும் வெளியிட்டார். அவர் யார்? இணை ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து அவைத்தலைவராக அவரை நியமித்ததே இதே மனுதாரர் தானே? பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த காலத்திலும் கூட கட்சியின் எல்லா முடிவுகளுக்கும் பொதுக்குழுவின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற விதி இருந்தது. காரணம் பொதுக்குழுவே அதிமுகவின் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பு.

பதவியே காலி
நான் தான் அதிமுக என ஓபிஎஸ் நீதிமன்றங்களில் கூறிக் கொண்டிருக்கிறார். அவர் போக வேண்டிய இடம் தேர்தல் ஆணையம். ஆனாலும் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை செல்லாததற்கு காரணம் போதிய எண்ணிக்கையில் கட்சி நிர்வாகிகள் அவரிடம் இல்லை என்பதால் தான். பதவியே காலாவதியான பின்பு தான் அந்த பதவியில் இருப்பதாக ஓபிஎஸ் கூற முடியாது என ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. குறிப்பாக, ஓபிஎஸ் தரப்பு தெரிவித்த கருத்துகளையே அவருக்கு எதிராக திருப்பி வாதிட்டுள்ளது எடப்பாடி தரப்பு.












Click it and Unblock the Notifications