ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..கூட்டணி தர்மம்..சொன்னது போலவே 23 பேருடன் களமிறங்கிய தமாகா யுவராஜா
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக வேலை செய்ய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமையில் 23 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. கூட்டணி தர்மத்திற்காகவும் வேட்பாளரின் வெற்றிக்காகவும் தலைமை சொன்னதை கேட்டு தொகுதியை விட்டுக்கொடுப்பதாக கூறிய யுவராஜா, தனது தலைமையில் உறுப்பினர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக இரு அணிகள், நாம் தமிழர்கட்சி, தேமுதிக என இப்போதைக்கு 4 முனை போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம் இன்னமும் தனது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை. அதே போல டிடிவி தினகரன் வரும் 27ஆம் தேதி தனது முடிவு கூறுவதாக தெரிவித்துள்ளார். அவர் தனது கட்சி சார்பில் வேட்பாளரை அறிவிப்பாரா? அல்லது தேமுதிகவிற்கு ஆதரவு தருவாரா என்பது அன்றைய தினம்தான் தெரியவரும்.
அதிமுகவில் இரு அணிகளிலும் வேட்பாளர் யார் என்று முடிவு செய்ய முடியாத நிலையில் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவும் காங்கிரஸுக்காக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை திமுக அமைத்துள்ளது.
கூட்டணி தர்மம்..வெற்றிக்காக விட்டுக்கொடுப்பதில் தவறில்லை..ஜி.கே.வாசன் முடிவுக்கு யுவராஜா ஆதரவு
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரையில் தமாகா ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி. அதனால் தமாகா போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் இம்முறை அதிமுக இபிஎஸ் அணி போட்டியிட விரும்புகிறது. இதனை தமாகாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தங்கள் அணி சார்பில் தனித்து களமிறங்குவோம் என ஓ.பன்னீர் செல்வம் கூறினாலும், பாஜக போட்டியிட்டால் ஆதரிப்போம் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக 16 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை தமாகா தலைவர் ஜிகே வாசன் நேற்று நியமித்துள்ளார். இந்தக் குழுவில் கடந்த தேர்தலில் வெற்றியை இழந்த யுவராஜாவும் இடம்பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா தனது தலைமையில் 23 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்து அறிவித்துள்ளார். இந்த தேர்தல் பணிக்குழுவின் நிர்வாகிகள், பணியை சிறப்பாக மேற்கொள்வார்கள் என்று தமாகா இளைஞரணி சார்பில் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார் யுவராஜா. பேட்டியில் சொன்னது போலவே, கூட்டணி தர்மத்திற்காகவும் கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காகவும் பரபரப்பாக தேர்தல் பணியை செய்ய கிளம்பி விட்டார் யுவராஜா.