முன்னாள் எம்.எல்.ஏவை சைக்கிள் கேப்பில் தூக்கிய பாஜக.. அண்ணாமலை ஸ்கெட்ச்.. அதிமுகவுக்கு பயங்கர ஷாக்!
சென்னை : முன்னாள் எம்.எல்.ஏ அருண் சுப்பிரமணியன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.
திருத்தணி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏவாக இருந்தவர் அருண் சுப்பிரமணியன். எம்.எல்.ஏவாக இருந்தபோதே ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் அருண் சுப்பிரமணியன்.
இந்நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார் அருண் சுப்பிரமணியன்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், அருண் சுப்பிரமணியனுக்கு 2021ல் சீட் வழங்கப்படவில்லை.
ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு.. மிரட்டிய கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது..15 நாட்கள் சிறை
மாற்றுக்கட்சியினருக்கு வலை வீசும் பாஜக
பாஜகவை தமிழகத்தில் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழக பாஜக, மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை தொடர்ந்து கட்சியில் சேர்த்து வருகிறது. திமுக துணை பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி. முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.பி.ராமலிங்கம், கு.க.செல்வம், டாக்டர் சரவணன் ஆகியோர் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்தனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.பி சசிகலா பஷ்பா உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்தனர்.
அடுத்தடுத்து
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக திமுக, அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளிடம் பேசி, முக்கிய பதவிகளைத் தருவதாக உறுதி கொடுத்து கட்சியில் சேர்த்து வருகின்றனர். திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா உள்ளிட்டோர் சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ
இந்நிலையில், அதிமுகவில் தற்போது நிலவி வரும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதலுக்கு மத்தியில், அதிருப்தியில் இருந்து வரும் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க திமுக - பாஜக இடையே பெரும் போட்டியே நடந்து வருகிறது. சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி திமுகவில் இணைந்தார். மேலும் சில எம்.எல்.ஏக்களும் திமுகவிற்கு தாவப்போவதாக தொடர்ந்து பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், தான் மற்றொரு முன்னாள் எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்துள்ளார்.
தேமுதிக எம்.எல்.ஏ அருண் சுப்பிரமணியன்
2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் முதன்முதலாக தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. தேமுதிக 29 எம்.எல்.ஏக்களை பெற்று, திமுகவை பின்னுக்குத் தள்ளி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. தேமுதிகவில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் அருண் சுப்பிரமணியன்.
கைது - அதிமுக ஆதரவு
நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து தடுப்புச் சுவர் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி போலீசார் அருண் சுப்பிரமணியனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த அருண் சுப்பிரமணியன் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் அதிமுகவில் இணைந்தார்.
சீட் கொடுக்காததால் அதிருப்தி
அதிமுகவில் இணைந்த அவருக்கு 2016ல் மீண்டும் சீட் வழங்கப்பட்டது. ஆனால், அந்த தேர்தலில் அருண் சுப்பிரமணியன் தோல்வியடைந்தார். தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு 2021 தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அவர் தீவிர கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ
இந்நிலையில் தான், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அருண் சுப்பிரமணியன் தன்னை பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்வின்போது பாஜக நிர்வாகிகள் வினோஜ் பி செல்வம், அஸ்வின் ராஜமகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ திடீரென பாஜகவில் இணைந்தது அதிமுகவினருக்கு ஷாக் கொடுத்துள்ளது.