தடுப்பூசியால் கொரோனா வைரஸ் வலிமையாகுதாம்.. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பரப்பும் வதந்தி.. நம்பாதீங்க
சென்னை: தடுப்பூசிகளால்தான் கொரோனா வைரஸ் உருமாறி அதிக ஆற்றல் கொண்டதாக மாறுகிறது என வழக்கம் போல உளறியுள்ளார் நோபல் பரிசு வென்ற டாக்டர் லூக் மாண்டோக்னிர்.
வைராலஜி நிபுணரான இந்த பிரெஞ்சுக்காரர் கொரோனா வைரஸ் தொடர்பாக மட்டுமல்ல, பல்வேறு அறிவியல் விஷயங்களில் இதுபோல தத்து பித்து கருத்துக்களை கூறியவர் இவர்.
வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற காமெடி காட்சியைப் போல, நோபல் பரிசு வென்றவர் சொன்னால் சரியாகத்தானே இருக்கும் என்று நம்பி ஏமாந்தவர்கள் பலர். ஆனால் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து இவையெல்லாம் பிதற்றல் என்று அறிவிப்பதும் வாடிக்கையாக மாறிவிட்டது.
காஷ்மீரில்..120 வயதில் தடுப்பூசி போட்டு ..கிராமத்தை ஊக்கப்படுத்திய பாட்டி..ராணுவ தளபதி கவுரவித்தார்!
தடுப்பூசி பற்றி தத்துபித்து கருத்து
இந்த வரிசையில்தான் புதிதாக, லூக் மாண்டோ்கனிர் கொரோனா வேக்சின் பற்றி தத்து பித்து தனமாக ஒரு கருத்தை கூறப்போக, அதையே பிடித்துக் கொண்ட சில மக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி, தடுப்பூசி போடும் ஆர்வத்தை மழுங்கடித்து வருகிறார்கள். அப்படி என்ன சொன்னார் தெரியுமா.
வைரஸ் ஸ்ட்ராங் ஆகுதாம்
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள்தான் உருமாறிய கொரோனாவையே உருவாக்குகிறார்களாம். இது விஞ்ஞானிகளுக்கும் தெரியும் அப்படியும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். ஏனெனில், கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் உடலில் வைரஸ் உயிர்வாழ தன்னை மாற்றிக் கொள்கிறது. அது தீவிர கொரோனாவாக மாறிவிடும் என்று கருத்தை உதிர்த்துள்ளார் லுக் மாண்டோக்னிர்.
பரவும் வதந்தி
ஏற்கனவே தடுப்பூசி போட தயங்கும் மக்களை கணிசமாக கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளில், இந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், நோபல் பரிசு பெற்றார் என்ற ஒரே காரணத்திற்காக இவர் கூறுவதை ஏற்க தேவையில்லை என்பதை இவரது கடந்த கால கருத்துக்கள் உணர்த்தியுள்ளன.
பாக்டீரியா உளறல்
லுக் மாண்டோக்னிர், ஆரம்பத்தில் கூறிய கருத்துக்களில் முக்கியமானது, பாக்டீரியாவை ஏராளமான நீரில் கரைத்தாலும் அதிலிருந்து ரேடியோ கதிர்கள் வரும் என்பது. இவ்வளவு பெரிய ஆள் சொல்கிறாரே என்று அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையின் ஓர் துறையில் அது பரிசோதிக்கப்பட்டது. ஆனால் ரேடியோ கதிர்கள் வரவில்லை.
பல விஷயங்கள் இருக்கு
வூஹானில் ஓர் ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்பட்டதுதான் கொரோனா. அது வெளியே கசிந்தது என்று முதலில் வதந்தி பரப்பியவர்களில் இவரும் ஒருவர்தான். இந்திய விஞ்ஞானிகளும் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்று நம்மையும் நைஸாக சப்போர்ட்டுக்கு சேர்த்தார். ஆனால் அதுவும் நிரூபிக்கப்படவில்லை. அமெரிக்காவே, இந்த வூஹான் சதி குறித்த தியேரியை நம்பவில்லை.
தண்ணீருக்கு ஞாபக சக்தி
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இவர் உதிர்த்த மற்றொரு கருத்து ஃபேமசானது. தண்ணீருக்கு நினைவாற்றல் உண்டு என்று அடித்து விட்டார். ஆனால் அதுவும் பொய் என நிரூபிக்கப்பட்டது. இவர்தான் இப்போது சொல்கிறார் தடுப்பூசி கொரோனாவை வீரியமாக்கும் என்று. ஆனால், வைரஸ்கள் உருமாறுவது வழக்கமானதுதான். அதை தடுப்பூசியோடு ஒப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை இவர் உணரவில்லை.
பல கேள்விகள்
தடுப்பூசிகள் இன்னும் பரவலாகாத இந்தியா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா ஏற்கனவே மோசமாக பரவியுள்ளதே, அது எப்படி என்ற கேள்விக்குதான் இன்னும் பதில் இல்லை. எத்தனையோ கொடிய வியாதிகளை தடுப்பூசி மூலம் தடுத்துள்ள இந்த விஞ்ஞான உலகம், இப்படியான உளறல்களை புறம்தள்ளி முன்னேற வேண்டியது அவசியம்.
கற்பனை கருத்துக்கள்
கொரோனா ஒரு புதுவகை நோய் என்பதால், ஆளாளுக்கு கற்பனையாக கருத்து கூற ஆரம்பித்துவிட்டனர். லுக் மாண்டோக்னிர் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் பல வகை வதந்திகள் கடந்த ஓராண்டாக உலவுகின்றன. அதில் ஒன்றுதான், 5ஜி அலைவரிசை தொடர்பானது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், மருத்துவர் தாமஸ் கோவன் 5 ஜி ரேடியோ அதிர்வுகளால் கொரோனா பரவியது என்றார்.
5ஜி டவர்கள்
இந்த பேச்சு சான்றுகள் இல்லாதது மற்றும் உடல் ரீதியாக சாத்தியமற்றது என்றாலும், பரவலாக மக்களிடம் பரவியது. ஐரோப்பிய நாடுகளில் குறைந்தது 87 செல்போன் டவர்கள் தீ வைக்கப்பட்டன. வைராலஜிஸ்ட் ஜூடி மைக்கோவிட்ஸ், கொரோனா வைரஸ் ஒரு திட்டமிட்ட சதி என்று கூறினார். ஆனால் இவை எதுவுமே நிரூபிக்கப்படாத கற்பனைகளாகவே எஞ்சியுள்ளன.