மீண்டும் கொரோனா ஊரடங்கு? ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில்... குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
சென்னை: மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் காரணமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பச் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்,
நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஐந்து நாட்களாகவே தினசரி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்தே பதிவாகி வருகிறது.
தமிழகத்திலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு கொரோனா பாதிப்பு.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்
அதன்படி மாநிலத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், எங்கு மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
ரயில் நிலையம் முற்றுகை
குறிப்பாக, இந்த அச்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்தியில் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்னை சென்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். கேரளாவிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் இருப்பதால், கேரளாவில் இருந்து சென்னை வழியாகவும் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயன்று வருகின்றனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இது குறித்துப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூறுகையில், வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனக் கூறுகின்றனர். அப்படி லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால், உணவு போன்ற அடிப்படை விஷயங்களைப் பெறுவது கூட கடினமாகிவிடும். அதற்கு முன் ஊர்களுக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதே எங்கள் ஆசை. கொரோனா பரவல் குறைந்த பின்னரே மீண்டும் வருவோம் என்று தெரிவித்தார்.
ரயில்கள்
கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான ரயில்கள் இயக்கப்படுவதை உறுதி செய்வதாகத் தென்னக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு திடீரென்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிலடங்காத பல துன்பத்தை எதிர்கொண்டனர். பல ஆயிரம் மக்கள் சாலை மார்க்கமாக நடந்தே சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். மேலும், வழியிலேயே பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழக்கும் துயர்மிகு சம்பவங்களும் நடைபெற்றது.