சிங்கப்பெண்.. செல்போன் திருடனை 1 கிமீ விரட்டி பிடித்த பெண் போலீஸ் காளீஸ்வரி..பரபர சென்னை ‛சேஸ்’
சென்னை: சென்னையில் பஸ்சில் ஏறி பயணியிடம் செல்போன் திருடிவிட்டு தப்ப முயன்ற வடமாநில இளைஞரை பெண் போலீஸ் காளீஸ்வரி ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வருபவர் காளீஸ்வரி. இவர், தாம்பரம் பஸ் நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த வேளையில் கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பஸ்சில் வடமாநில இளைஞர் ஒருவர் ஏறினார். அதன்பிறகு அவர் திடீரென்று பஸ்சில் இருந்து இறங்கி வேகமாக சென்றார்.
உஷார்.. சார்ஜ் ஏறிய செல்போன்.. ஈரக்கையோடு எடுத்து பேசிய அரசு ஊழியர் பலி.. மின்சாரம் தாக்கிய சோகம்
இளைஞர் மீது சந்தேகம்
அந்த இளைஞரை பார்த்தபோது காளீஸ்வரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் ஏதோ தவறு செய்வதாக காளீஸ்வரி நினைத்தார். இதனால் அவர் இளைஞரிடம் விசாரிக்க சென்றார். காளீஸ்வரியை பார்த்த இளைஞர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் அவர் மீதான சந்தேகம் வலுத்தது. இளைஞரை நிற்கும்படி காளீஸ்வரி கூறினார். இருப்பினும் அவர் நிற்காமல் வேகமாக ஓடினார்.
துரத்தி பிடித்த போலீஸ்
இதனால் காளீஸ்வரியும் விடவில்லை. இளைஞரை பிடித்து விசாரிக்க அவர் முடிவு செய்தார். இதனால் அவரும் இளைஞரை விரட்டி பிடிக்க பின்னால் ஓடினார். ஒரு கிலோமீட்டர் தூரம் வரை விரட்டி சென்ற காளீஸ்வரி, இளைஞரை மடக்கிப்பிடித்தார். இதையடுத்து இளைஞரிடம் அவர் சோதனை நடத்தினார். அப்போது அவர் ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த ஐபோன் வைத்திருந்தது தெரியவந்தது.
ஜார்கண்ட் இளைஞர்
இந்த ஐபோன் திருடப்பட்டு இருக்கலாம் என்பதால் இளைஞரை போலீஸ் நிலையத்துக்கு அவர் அழைத்து சென்றார். இதையடுத்து இளைஞரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோட்டோ (வயது 19) என்பதும், கூடுவாஞ்சேரி அரசு பஸ்சில் இருந்த பயணி ஒருவரின் ஐபோனை திருடிவிட்டு கீழே இறங்கியபோது காளீஸ்வரியிடம் சிக்கியது தெரியவந்தது.
செல்போன் ஒப்படைப்பு
மேலும் ஐபோனை பறிகொடுத்தவர் பற்றி போலீசார் விசாரிக்க துவங்கிய நிலையில் அவரே தனது போனை தொடர்பு கொண்டார். இதையடுத்து போலீசார் அவரிடம் விபரங்களை தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைத்து போனை வழங்கினார். விசாரணையில் அவர் ஆண்டிமடத்தை சேர்ந்த மாயவேல் (30) என்பது தெரியவந்தது. அவரிடம் போன் ஒப்படைக்கப்பட்டது. மாயவேல் புகாரின் பேரில் போலீசார் சோட்டோவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குவியும் பாராட்டு
இதற்கிடையே துரிதமாக செயல்பட்டு செல்போன் திருடனை சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த பெண் போலீஸ் காளீஸ்வரிக்கு பொதுமக்கள், உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்னளர். காவல் ஆய்வாளர் சார்லஸ், காளீஸ்வரிக்கு சால்வையோடு வெகுமதி அளித்து பாராட்டினார்.