இன்னும் சில தினங்களில் புதிய அரசு... தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் ஆலோசகர் பதவியை முன்னாள் தலைமைச் செயலர் சண்முகம் ராஜினாமா செய்தார்.
தமிழ்நாட்டின் 46ஆவது தலைமைச் செயலாளராக 2019இல் பொறுப்பேற்றவர் சண்முகம். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை ஏற்பட்ட போது அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டது. அந்த டாஸ்க் ஃபோர்ஸ் தலைவராகவும் சண்முகம் இருந்தார். சிறப்பான நடவடிக்கைகள் காரணமாகத் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜனவரி 31 ஆம் தேதி சண்முகம் ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் திமுக தலைமையில் புதிய அரசு அமையவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் ஆலோசகர் பதவியைச் சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.
1985ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலளாரவும் நிதித் துறை செயலாளராகவும் இருந்தவர்.