"மிஸ்ஸாயிருச்சே".. அதை காணாமே.. டாக்டர் ஐயா மேல பயம் வந்துருச்சோ.. பொதுநலன் புரிதலுடன் ரஜினி.. சபாஷ்
பாபா பட போஸ்டர்களில் நடிகர் ரஜினிகாந்த் கையில் சிகரெட் காணப்படவில்லை
சென்னை: பாபா பட போஸ்டர்களில், ரஜினிகாந்த் வாயில் சிகரெட் மிஸ்ஸாயிடுச்சே.. என்ன காரணமாக இருக்கும்? ஒருவேளை பாமகவினருக்கு பயமா? என்று சிலர் சோஷியல் மீடியாவில் சந்தேகங்களை படர விட்டு வருகிறார்கள்.
ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் பார்ப்போமா...
1996ம் ஆண்டு முதலே, அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என்ற எந்தவித முடிவையுமே சொல்லாமல் இருந்து, ரசிகர்களை உசுப்பிவிட்டு கொண்டிருந்தார். அதனால், 2002ம் ஆண்டு ரஜினிகாந்த் அரசியல் குறித்து என்ன முடிவெடுக்க போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்து கிடந்தனர்..
அதே வருடம்தான் பாபா படமும் ரிலீஸுக்கு ரெடியாகி கொண்டிருந்தது.. இந்த படத்திலாவது, தன்னுடைய அரசியல் வருகை குறித்து ரஜினி மெசேஜ் சொல்வார் என்று அந்த பரிதாப ரசிகர்கள் ஏங்கி கிடந்தனர்.
வீரப்பன்
படமும் ரிலீஸ் ஆனது.. சில அரசியல் வசனங்கள், ஒருசிலரை ஈட்டிபோல குத்திக்காட்டியது.. அதேசமயம், ரஜினிகாந்த் அந்த படத்தில், சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளும் ஆக்கிரமித்திருந்தன.. இதனை பாமக கடுமையாக எதிர்த்தது.. இப்படி ஒரு பகையை கிளப்பி வைத்ததே, ரஜினி தான் என்று அப்போது பரவலாக பேசப்பட்டது... காரணம், அதற்கு முன்பு கர்நாடகாவில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி, வீரப்பனை கொலை செய்ய வேண்டும் என்று பேசியிருந்தார்.. அதுவும் கன்னடத்திலேயே பேசியிருந்தார்..
தியேட்டர்கள்
இதை தமிழகத்தில் கடுமையாக எதிர்த்தது டாக்டர் ராமதாஸ்தான்.. வன்னிய வீரர் ஒருவரை ரஜினி கொலை செய்ய சொல்கிறார் என்று ராமதாஸ் வெளிப்படையாகவே பொதுக்கூட்டங்களில் பேசினார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் வன்னியர் மாநாடு நடந்தது.. அந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ், ரஜினியின் பாபா படத்தை வன்னியர்கள் யாரும் பார்க்கக் கூடாது என்று பிரத்யேகமாக ஒரு கட்டளையே போட்டார்... அந்த நேரத்தில், பாபா வெளியான தியேட்டர்களில் பாமகவினர் தாக்குதல் நடத்தினர்... சில இடங்களில் படப்பெட்டியை தூக்கி சென்ற சம்பவமும் நடந்தன..
பாரதிராஜா
இதற்கு பிறகுதான், ராமதாஸை சட்டரீதியாக சந்திப்பேன் என்று ரஜினியிடம் இருந்து ஒரு அறிக்கை வெளியானது.. இந்த பிரச்சனை லேசாக ஓய்ந்த நேரத்தில், காவிரி பிரச்சனை வெடித்தது.. கர்நாடகாவை கண்டித்து நெய்வேலியில் பேரணி நடத்தி, அனல் மின்நிலையத்தை முற்றுகையிடுவோம் என்று 2002, அக்டோபரில் டைரக்டர் பாரதிராஜா அறிவிப்பு வெளியிட்டார். அத்தனை காலமும் சினிமா நட்சத்திரங்களை எதிர்த்துவந்த டாக்டர் ராமதாஸ், இந்த அறிவிப்பிற்கு தன்னுடைய ஏகோபித்த ஆதரவை தந்தார். அதேசமயம், இது தேவையில்லாத போராட்டம், நெய்வேலி போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.
சேற்றில் பன்றி
பாமகவின் செல்வாக்கு மிக்க தொகுதியான நெய்வேலியில், தனக்கு எதிர்ப்பு எழக்கூடும் என்று ரஜினி கருதியதே அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.. ஆனால், அந்தப் போராட்டத்தில் ரஜினி கலந்துகொள்ளவில்லை.. அடுத்த நாள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்த பிரச்சினைகள் மெல்ல முடிவடையும் தருணத்தில், திருவண்ணாமலையில் பேசிய ராமதாஸ், "சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி" என்று உருவகப்படுத்தி ரஜினியை தரக்குறைவாக விமர்சித்தார்...
மிஸ்ஸாயிடுச்சே
முதலில் பாபா பிரச்சினை, அடுத்து நெய்வேலி போராட்டம், அடுத்து திருவண்ணாமலை பேச்சு என்று ராமதாஸ் மீதிருந்த கோபத்தை, 2004ம் ஆண்டு நடைபெற்ற எம்பி தேர்தலில் ரஜினி மொத்தமாக வெளிப்படுத்தினார்... திமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக போட்டியிட்ட 6 தொகுதிகளில் ஜனநாயக முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்க தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார் ரஜினி. இதனால், பாமகவுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் எதிர்ப்பு வலுத்தது.. மதுரை வந்த ராமதாசுக்கு, ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர்.. உடனே அவர்கள் மீது பாமகவினர் தாக்குதல் நடத்தினர்.. இதனால், ராமதாஸ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது..
மிஸ்ஸாயிருச்சோ
எம்பி தேர்தலையொட்டி ரஜினி ஒரு அறிக்கை வெளியிட்டார்.. அதில், "ஒரு பெரியவருக்கு, ஒரு படித்தவருக்கு, ஒரு பெரும் கட்சித் தலைவருக்கு இதுதான் அழகா? நியாயமா? என்னையும் என் ரசிகர்களையும் கடுமையாக விமர்சிக்கலாமா? அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு. ஒன்று ஊழல், இன்னொன்று வன்முறை. டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாக திகழ்கிறார். அரசியல் என்ற பெயரில் இம்மாதிரியான ராட்சஸ செயல்களிலும், அராஜகங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் டாக்டர் ராமதாசை என்னுடைய தனிப்பட்ட பாதிப்புக்காக நான் எதிர்க்கவில்லை. இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதால்தான் நல்லவர்களும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்" என்று ரஜினி கூறியிருந்தார்.
புகை + பகை
அதோடு சரி.. இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது.. ஆனால் 2 வருடத்துக்கு முன்பு, எம்பி தேர்தலின்போது, ரஜினி அரசியலுக்கு வருவார், பாமக கூட்டணியில் வரக்கூடும் என்று மூத்த தலைவர் தமிழருவி மணியனே அப்போது கூறியிருந்தது, மறுபடியும் களத்தை பரபரப்பாக்கியது. ஆனால், எதிர்பார்த்தபடியே ரஜினி அரசியலுக்கு வரவில்லை.. அரசியலுக்கு வராமலேயே அரசியலில் இருந்து ஓய்வும் பெற்றுவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்த நேரத்தில் அன்புமணியை அழைத்து நன்றி தெரிவித்தபோது, அந்த புகைப்பழக்கத்தை காரணமாக சொன்னதாக தகவல் வெளியானது.
மிஸ்ஸிங்
அதுமட்டுமல்ல புகையால் வரும் பிரச்சனையை லேட்டாகவே தான் புரிந்து கொண்டதாகவும், ரசிகர்கள் யாரும் புகைக் பிடிக்க கூடாது என்றும் ரஜினி அட்வைஸ் கூறியிருந்ததாகவும் செய்திகள் வந்தன.. இந்நியில், இப்போது, பாபா படம் மறுபடியும் ரிலீஸ் ஆக போகிறது.. பாபா போஸ்டரில், ரஜினிகாந்த், வாயில் சிகரெட்டுடன், கையில் பாபா முத்திரையை காட்டியிருப்பார்.. அதே போஸ்டர்கள்தான் இப்போது மறுபடியும் வெளியிடப்பட்டுள்ளது.. ஆனால், ரஜினியின் வாயில் இருந்த சிகரெட் மிஸ்ஸிங். இதுதான் பல தரப்பினருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் தந்துள்ளது.. 'இது பாமக மீதான பயமா? என்று சிலர் கேட்க ஆரம்பித்துள்ளனர்.. மேலும் சிலரோ, வயதுகூடி ரஜினிக்கு இருக்கும் பொறுப்பு, பொதுநலம் குறித்த புரிதலாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்..
புத்தர் படம்
4 நாட்களுக்கு முன்பு, பாமக தலைவர் அன்புமணியிடம், பாபா பட ரிலீஸ், மற்றும் சிகரெட் பிடித்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு அன்புமணி, "பாபா படத்தில் மட்டும் தான் அதுமாதிரியான சீன்கள் இடம் பெற்றுள்ளதா? மற்ற எந்த படத்திலும் அந்த மாதிரியான சீன்கள் இடம் பெறவில்லையா? மற்ற படம் எல்லாம் புத்தர் சம்பந்தமான படமா? நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் சமுதாய பொறுப்புணர்வு கடமை உணர்வு அதிகம் உடையவர். எது நல்லது கெட்டது என எல்லாம் அவருக்கு நன்றாக தெரியும். எது தவிர்க்க வேண்டும். எது தவிர்க்கக் கூடாது என்கிற கடமை உணர்வு எல்லாம் நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தெரியும்" என்று கூறியிருந்தார்.
பவர்ஃபுல் காலம்
அதாவது, பாமகவின் தலைவரான பிறகு, அன்புமணியின் பக்குவம் நிறைந்த அரசியல் வெளிப்பாடாகவே இந்த கருத்துக்கள் பார்க்கப்பட்டு வருகின்றன.. வாயில் சிகரெட் இல்லாத ரஜினியும் சரி, அதற்கு அன்புமணியின் விளக்கமும் சரி, சமூக அக்கறையும், பொறுப்புணர்வு கலந்த முதிர்ச்சியும் இரு மூத்த கலைஞர்களிடம் தானாகவே ஒட்டிக் கொண்டுவிட்டதும் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. எப்பேர்பட்ட விஷயத்தையும் மாற்றக்கூடிய மற்றும் மறக்கடிக்கக்கூடிய வலிமை "காலத்துக்கு" மட்டுமே உண்டு போலும்..!!!