சட்டசபையில் ஆளுநர் உரை.. அதிமுக வெளிநடப்பு... விசிக வெளியேறியது இதற்குத்தானாம்
ஆளுநர் உரையுடன் சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில் அதிமுக, மற்றும் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. ஆளுநர் உரையைப் புறக்கணித்து இன்று அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் முதல்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இசைக்கல்லூரியை சேர்ந்த பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினார்.
அம்மா கிளினிக் மூடல், அம்மா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

எதுவும் சரியில்லை
ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கும் போதே அதிமுகவினர் கூச்சலிட்டனர். அம்மா மினி கிளினிக் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். வெளி நடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாகவும் குற்றம் சாட்டினார். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

விசிக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
சட்டசபைக் கூட்டத்தொடரில் இருந்து திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷாநவாஸ், செய்யூர் பாபு, திருப்போரூர் பாலாஜி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தாக தெரிவித்தனர்.

விசிக விளக்கம்
வெளிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் "அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய The Undergraduate Medical Degree Courses Bill, 2021 யை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் சட்டசபையை மேதகு ஆளுநர் சிறுமைப்படுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசையும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதிக்கிற ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புறக்கணித்து வெளிநடப்புச் செய்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்
Recommended Video


நீட் தேர்வு தேவையில்லை
இந்நிலையில், ஆளுநர் உரையில், பொதுவாக நுழைவுத்தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே தொழில் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றது என இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தேவையில்லை என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications