குரு பெயர்ச்சி 2020: தென் திட்டை ராஜகுரு... குருவித்துறை குருபகவான் - குரு பரிகார தலங்கள்
நவகிரகங்களில் சுப கிரகமான குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு குரு பரிகார தலங்களில் சிறப்பு யாகங்கள், லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
சென்னை: குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு குரு பரிகார தலங்களில் சிறப்பு யாகங்கள், சிறப்பு லட்சார்ச்சனைகள் நடைபெற உள்ளன. குரு பெயர்ச்சியினால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் அருகில் உள்ள குரு பரிகார தலங்களுக்கு சென்று யாகங்களில் பங்கேற்கலாம்.
வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு வணங்கவேண்டும்.
குருபகவானுக்கு பரிகாரம் செய்து வழிபட்டால் நன்மைகள் நடைபெறும்.
நவக்கிரகங்களில் முழுமையான சுப பலம் கொண்டவர் குருபகவான் தான். தான் இருக்கும் இடத்தை விட, தான் பார்க்கும் இடங்களை தன்னுடைய பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை கொண்டவர். அதோடு, ராகு-கேது, செவ்வாய், புதன், சுக்ரன், சனி போன்ற கிரகங்களினால் ஏற்படும் தோஷங்களையும் தன்னுடைய சுப பார்வை பலத்தினால் குறைத்து நற்பலன்களை அளிக்கும் அதீத சக்தி படைத்தவர். இதன் காரணமாகவே குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வதுண்டு.
மற்ற குரு தலங்களான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட மற்ற கோவில்கள் எல்லாம் பரிகார தலங்களாக உள்ளன. ஆனால் இங்குள்ள குருபகவான் வசிஷ்டேஸ்வர்ர், சுகந்த குந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில், வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாக தனி சந்நிதயில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள குருபகவானை வேண்டிக்கொண்டால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், சந்தான பாக்கியம், உயர் பதவிகள் கிட்டும் என்பது மக்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே மக்கள் அனைவரும் இத்தலத்திற்கு வந்து வணங்கிச் செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதன்படி இந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதியன்று இரவு 9:48 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
தென் திட்டை ராஜ குரு
தஞ்சாவூரில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் தென்திட்டை என்றழைக்கப்படும் தென்குடித்திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழைமை வாய்ந்த வசிஷ்டேஸ்வரர் ஆலயம். சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பரால் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலமாகும். சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. அதோடு, இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் உலகநாயகி சுகுந்த குந்தளாம்பிகை, மங்களாம்பிகை என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இங்கு குருபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு வீற்றிருக்கும் குருபகவான் ராஜ குருவாக இருந்து அனைவருக்கும் அருள் புரிந்துவருவது தனிச்சிறப்பாகும்.
பாடி திருவாலிதாயம்
சென்னை அருகில் பாடியில் வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். இங்கு குருபகவான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இவர் சிவனை வணங்கும் விதமாக மேற்கு நோக்கியிருப்பது சிறப்பான அமைப்பு
தக்கோலம் குரு
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.
ஆலங்குடி தட்சிணாமூர்த்தி
நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் பிரகாரத்தின் இடது புறம் தட்சிணாமூர்த்தியாக இங்கு குரு பகவான் அருள் புரிகிறார். தமது சீடர்களுக்கு 24 அட்சரங்கள் உள்ள மந்திரத்தை உபதேசித்தார் என்பதால், இவரை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை சமர்பித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.
மயிலாடுதுறை மயூரநாதர் - மேதா தட்சிணாமூர்த்தி
இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமுர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோவிலில் தட்சிணாமுர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டமங்கலம் குரு
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னதி அமைந்துள்ளது. இவரது சன்னதி முன் மண்டபத்தில் 12ராசிக்களின் கட்டம் வடிக்கப்பட்டுள்ளது.
குருவித்துறை குரு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர்.
வாலாஜாபேட்டை - மேதா தட்சிணாமூர்த்தி
வேலூர்மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி பகவான் ஆலயத்தில் குருபகவான் மேதா தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். இவரை வழிபட கல்வி செல்வமும் அதிகரிக்கும். குருப்பெயர்ச்சி நாளில் சிறப்பு யாகங்களும் நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் குரு, தட்சிணாமூர்த்தி
குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். இங்குள்ள மேதா தெட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.
ஆழ்வார்திருநகரி
தூத்துக்குடி மாவட்டத்தில் 108 திருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும். பொதுவாக ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், இத்தலத்தில் சிஷ்யனான மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். இந்த கோவில்கள் மட்டுமல்ல சிவ ஆலயங்களில் நவகிரக குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட நன்மைகள் நடைபெறும்.
முறப்பநாடு
தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலாயங்களுள் ஒன்றான இந்த ஸ்தலம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ளது. இங்கே கைலாச நாதர் குருவின் அம்சமாக அமர்ந்துள்ளார். மகாபுஷ்கர புண்ணிய நாட்களில் இவ்விரு ஸ்தலங்களிலும் நீராடுவது அதிக மகிமையானது.