இனி நான் ஸ்டாப்.. நவ.16ம் தேதிக்கு பிறகும் தமிழகம்-கர்நாடகா இடையே அரசு, தனியார் பஸ்கள் இயங்கும்
சென்னை: நவம்பர் 16ம் தேதிக்குப் பின்னரும் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவையைத் தொடர்ந்து இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
அதில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையேயான பொதுப் பேருந்து போக்குவரத்துச் சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சுதா ரகுநாதன், எஸ்.ஏ.சந்திரசேகர், நமிதா.. ஒன்இந்தியா வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்ன பிரபலங்கள்
பஸ் சேவை ஆரம்பம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 11.11.2020 முதல் 16.11.2020 வரை கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பொதுப் பேருந்து போக்குவரத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எடியூரப்பா கோரிக்கை
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தினை தடையின்றி தொடர்ந்து இயக்க, கர்நாடக மாநில முதல்வர், தமிழ்நாடு முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துச் சேவையை தொடர பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எடப்பாடியார் ஓகே
இக்கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பணி நிமித்தமாக பொதுமக்கள் சென்றுவர ஏதுவாகவும், நவம்பர் 16ஆம் தேதிக்குப் பின்னரும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துச் சேவையைத் தொடர்ந்து இயக்குமாறு தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் ஒத்துழைப்பு
பொதுப் பேருந்து சேவையைப் பயன்படுத்தும்போது, அரசு வெளியிட்டுள்ள நிலையான கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.