Exclusive: அந்தக் கதையே வேண்டாம் எனக் கூறிவிட்டேன்; மறுவாக்குப்பதிவு ஏன் எனக் கூறும் ஹசன் மவுலானா..!
சென்னை: சென்னை வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது எண் வாக்குச்சாவடியில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட ஒரு விவிபாட் இயந்திரத்தை இரண்டு சக்கர வாகனத்தில் ஒருவர் கொண்டு சென்ற விவகாரம் தமிழகம் தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி மனு அளித்தவரும், காங்கிரஸ் வேட்பாளருமான ஹசன் மவுலானாவிடம் ஏப்ரல் 6-ம் தேதி இரவு என்ன நடந்தது என்பதை அறிவதற்காக பேசினோம்.
அவர் கூறியதாவது;
இரவு 8 மணி
''தேர்தல் நாளான ஏப்ரல் 6-ம் தேதி இரவு 8 மணி இருக்கும். திமுக வட்டச்செயலாளர் பாலசதீஷ் என்பவரிடமிருந்து எனக்கு போன் வந்தது. ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்கிறார் எனக் கூறியதும், நான் நிகழ்விடத்திற்கு விரைந்தேன். உடனடியாக வேளச்சேரி ஜே-7 காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததும் அங்கிருந்து போலீஸாரும் வந்துவிட்டனர்.''
மறுவாக்குப்பதிவு
''சரி வாங்க ஸ்டேஷனுக்கு போய் பேசுவோம், அங்கு வைத்து விசாரிப்போம் என போலீஸார் என்னிடம் கூறினர். நான் அந்தக் கதையே வேண்டாம், மீடியா வரட்டும் எனக் கூறிவிட்டு அங்கேயே நின்றோம். சற்று நேரத்தில் இந்த தகவல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் சென்றடைந்தது. இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி கவனத்துக்கு கொண்டு சென்றதுடன் மறுவாக்குப்பதிவு நடத்தவும் கோரிக்கை விடுத்தேன்.''
நியாயம்
''அதனடிப்படையில் தலைமை தேர்தல் அதிகாரி உரிய ரெஸ்பான்ஸ் கொடுத்து 92-வது எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார். ஒரு வேளை திமுக வட்டச் செயலாளர் மட்டும் இதை கவனிக்காமல் விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் எனத் தெரியாது. நேர்மையையும், நியாயத்தையும் மட்டும் நான் எதிர்பார்க்கிறேன்.''
என்ன காரணம்
''சனிக்கிழமை நடைபெறும் மறுவாக்குப்பதிவு நியாயமான முறையில் நடைபெறும் என நம்புகிறேன். மனசாட்சிக்கு விரோதமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரும் செயல்படமாட்டார்கள் என எண்ணுகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்'' என மறுவாக்குப்பதிவு கோரியதற்கான காரணங்களை விளக்கினார் ஹசன் மவுலானா.