சென்னை 383! "புயல்" காற்றுடன் பெய்த கனமழை.. அடையாறு முதல் கத்திப்பாரா வரை டிராபிக்! நேரடி ரிப்போர்ட்!
சென்னை: சென்னை தினக் கொண்டாட்டம் பெசன்ட் நகர் கடற்கரையில் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும் மக்கள் மழையில் நனைந்தபடியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1639 ஆம் ஆண்டு சென்னப்பட்டினம் உருவாகி அது பின்னாளில் சென்னை என்ற பெயரை பெற்றது. தமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னை வந்தாரை வாழவைத்து வருகிறது.
இந்த ஆண்டு 383ஆவது சென்னை தினத்தையொட்டி பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று முன் தினமும், நேற்றைய தினமும் கலைநிகழ்ச்சிகள், உணவு திருவிழா என கொண்டாட்டம் களைகட்டியது. மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை தினம் இன்று..383வது பிறந்த நாள்.. கனமழையிலும் களைகட்டிய கொண்டாட்டம்
மாநகராட்சி
சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலாச்சாரம் மற்றும் நம் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டன. இந்த இரு நாட்கள் நிகழ்ச்சியில் கொரோனா சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. அது போல் இயற்கை உரத்தை ஊக்குவிக்கும் வகையில் உர விற்பனை கடைகளும் இருந்தன.
பெசன்ட் நகர்
நேற்றைய தினம் கடைசி நாள் கொண்டாட்டத்தால் பெசன்ட் நகரில் அதிகளவிலான மக்கள் கூடினர். நேற்று மாலை முதலே சென்னையின் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. எனினும் அந்த நிகழ்ச்சியை காண வேண்டும் என்ற ஆர்வத்தால் பெரும்பாலானோர் அங்கு குவிந்தனர். அந்த நிகழ்ச்சியின் கள நிலவரம் குறித்து இங்கே பார்க்கலாம்.
போக்குவரத்து நெரிசல்
பெசன்ட் நகரை நெருங்க நெருங்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதையடுத்து உள்ளே சென்ற போது அங்கு சிங்கப்பூர் கலை நிகழ்ச்சிகளை நினைவுப்படுத்தும் வகையில் மின் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
கலர் கடைகள்
அழகிய கலர் குடைகளை வைத்தும் அலங்காரம் களைகட்டியது. இரு புறமும் உணவு, பாரம்பரியம், கைவினை பொருட்கள், தேன் உள்ளிட்டவைகளின் விற்பனையகங்கள் இருந்தன. ஒரு இடத்தில் மேடை அமைக்கப்பட்டு கலர் கலராக விளக்குகள் எறியவிடப்பட்ட நடைபாதையில் மக்கள் ஆட்டம் போட்டனர்.
கனமழை
அப்போது திடீரென இரவு 8.45 மணிக்கு கனமழை கொட்டியது. இதனால் மக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள உணவு ஸ்டால்களில் தஞ்சமடைந்தனர். கிட்டதட்ட 45 நிமிடங்களுக்கு விடாமல் கனமழை பெய்தது. கடற்கரை பக்கம் என்பதால் காற்று பயங்கரமாக வீசியது. இடி மின்னல் சப்தமும் அச்சத்தை ஏற்படுத்தியது.
தண்ணீர் தேங்கியது
இந்த மழையால் சாலைகளில் கெண்டை கால் வரை தண்ணீர் தேங்கியது. மழையால் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், ஆங்காங்கே இருந்த வெள்ளை நிற துணிகளை எடுத்துக் கொண்டு குடை போல் போர்த்திக் கொண்டனர். மேலும் நிகழ்ச்சிக்கு உள்ளே போகும் போது அழகான குடைகள் அலங்காரம் இருந்த நிலையில் மழைக்காக அவற்றை பிய்த்து சென்று அலங்கோலமாக இருந்தது. ஒரு குடையை கூட விடவில்லை.
போக்குவரத்து நெரிசல்
இதையடுத்து மழை சற்று குறைந்தவுடன் அனைவரும் ஒரே நேரத்தில் வாகனங்களில் புறப்பட்டதால் அடையாறு முதல் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் வரை ஆமை போல் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அளவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தனை மழையிலும் மக்கள் சென்னை தினத்தை கொண்டாடினர். ஆனால் உணவு ஸ்டால் போட்டவர்களால் உணவுகளை விற்கமுடியாமல் அவதியடைந்தனர்.