தீபாவளி பண்டிகை.. விடிய விடிய பயணம்.. சென்னையிலிருந்து 6 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து 6 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களை சென்னையில் பணி நிமித்தமாகவும் கல்விக்காகவும் பிழைப்பிற்காகவும் வந்தவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்று அங்கு உற்றார், உறவினர்களுடன் கொண்டாடுவது வழக்கம்.
விண்வெளியில் முத்திரை.. ஏர்டெல் பார்ட்னர்! 36 பிரிட்டன் சேட்டிலைட்களை சுமந்து சென்ற இந்தியா ராக்கெட்
இப்படி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை உள்பட வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இவர்கள் சொந்த வீடு எடுத்து தங்கியிருந்தாலும் கூட பண்டிகை என்றால் அதை சொந்த பந்தங்களுடன் தங்களுடைய ஊரில் கொண்டாடவே விரும்புகிறார்கள்.
இதற்காக லட்சக்கணக்கானோர் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வது வழக்கம். இதற்காக முன்பதிவுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டன.
ரயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் கால் டாக்சிகளை புக் செய்து கொண்டும் இரு சக்கர வாகனங்களில் செல்வதையும் பார்க்க முடிந்தது. இதனால் புறநகர் பகுதியான பெருங்களத்தூர் பகுதியில் ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதுபோல் பரந்தூர் சுங்கச்சாவடி பகுதியிலும் இதே நிலைதான் நீடித்தது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமல்லாமல் கடந்த 21 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்ல 4,218 சிறப்பு பேருந்துகளும் தமிழகத்தின் பிற நகரங்களுக்கு இடையே அந்த 3 நாட்களில் 6,370 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
சென்னையில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் , பூந்தமல்லி பஸ் நிலையம், தாம்பரம் சானிடோரியம், வண்டலூர் பஸ் நிலையம், தாம்பரம் ரயில் நிலையம், கே கே நகர் மாநதர போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனை ஆகிய 7 இடங்களில் இருந்து விடிய விடிய பேருந்துகள் புறப்பட்டன.
புத்தாடைகள், ஸ்வீட் பாக்ஸ்களுடன் மக்கள் சாரை சாரையாக புறப்பட்டனர். இன்னும் சிலர் கூட்ட நெரிசலால் பேருந்துகளில் ஏற முடியாமல் அடுத்த பேருந்துக்கு காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டது. தாம்பரத்திலிருந்து பெங்களத்தூர் இடையே உள்ள 3 கி.மீ. தூரத்தை கடந்து செல்ல 10 முதல் 20 நிமிடங்கள் வரை நேரமானது. சென்னையிலிருந்து 4,722 அரசு பேருந்துகளில் 2.43 லட்சம பேர் பயணம் செய்ததாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தவிர ரயில்கள், கார்கள், பைக்குகள், விமானங்கள் என 6 லட்சம் பேர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சென்றுள்ளனர்.