அமித்ஷாவின் பேச்சு நாட்டிற்கு நல்லதல்ல! மக்களை திசை திருப்பும் முயற்சி! சுப.வீரபாண்டியன் சாடல்!
சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு நாட்டிற்கு நல்லதல்ல என்றும் மத்திய அரசு மீதான மக்களின் கோபத்தை திசைதிருப்பும் வகையில் அவர் பேசியிருப்பதாகவும் திராவிட இயக்கப் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இன்று ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்பவர்கள் நாளை உங்கள் தாய்மொழியும் வேண்டாம் எனச் சொல்வார்கள் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

மக்களுக்கு கோபம்
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் விலை ஏறிக் கொண்டே போகிறது. சமையல் எரிவாயுவின் விலையும் இதுவரை காணாத விலை உயர்வைக் கண்டிருக்கிறது. நாடு முழுவதும் மக்களின் கோபமும் மெதுவாக ஏறுநிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. என்ன செய்யலாம்? ஆங்கிலம் வேண்டாம், இந்தி போதும் என்று சொல்லலாம். உடனே மக்கள் அதுபற்றிப் பேசுவார்கள். இந்தி எதிர்ப்பில் எரிபொருள் விலையேற்றம் அமிழ்ந்து போகும் என்று ஒன்றிய அரசு திட்டம் போட்டுச் செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

திசை திருப்பும்
இது ஒரு திசைதிருப்பும் முயற்சியாக இருக்கலாம். இருந்தபோதிலும், நாம் இரண்டிலும் கவனமாக இருப்போம்! இரண்டையும் எதிர்ப்போம்!!
"பிரதமர் மோடி முடிவெடுத்து விட்டார். இப்போதே 70 விழுக்காடு ஒன்றிய அரசின் கோப்புகள் இந்தியில்தான் தயாராகின்றன. இனி 100 விழுக்காடும் இந்தியே ஆட்சி செய்யும். ஆங்கிலத்திற்கு வேலையில்லை" என்று அறிவித்துள்ளார் அமித்ஷா. ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் இந்தியே தவிர, உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இல்லை என்று ஒரு சமாதானத்தையும் கூறியுள்ளார்.

75 ஆண்டுகளாக
இதே சமாதானம்தான் கடந்த 75 ஆண்டுகளாகச் சொல்லப்படுகிறது. இங்கே ஆங்கிலத்தின் மீது ஏன் இவ்வளவு கோபம் என்ற வினாவிற்கு ஒரே ஒரு விடைதான் உள்ளது. அது ஆங்கிலத்தின் மீதான கோபம் இல்லை. ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்பவர்களின் வீட்டுப் பிள்ளைகள் எல்லோரும் ஆங்கிலம் அறிந்தவர்களாகவே இருக்கின்றனர். எங்களுக்கு மட்டும் ஆங்கிலம் இருக்கட்டும், உங்களுக்கெல்லாம் வேண்டாம் என்பதுதான் அதன் பொருள்!

பண்பாட்டுப் போர்
ஆங்கிலம் ஒழிந்தால்தான்,இந்தியும், இந்தி வழி சமஸ்கிருதமும், சமஸ்கிருதத்தின் வழி பார்ப்பனியமும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். இது வெறும் மொழிப்போர் அன்று. இது ஒரு பண்பாட்டுப் போர்! இன்று ஆங்கிலம் வேண்டாம், உங்கள் தாய்மொழியும், இந்தியும் இருக்கட்டும் என்று சொல்பவர்கள், நாளை, தாய்மொழியும் வேண்டாம், இந்தி மட்டுமே போதும் என்று சொல்வார்கள். அப்படிச் சொல்வார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? இன்றைய வடஇந்திய மாநிலங்கள் பலவே இதற்கான ஆதாரங்களாக உள்ளன!

ஆட்சி மொழி
வடஇந்தியாவில் பல மாநிலங்களில், அம்மாநிலத் தாய்மொழிகளைப் புறந்தள்ளி விட்டு, இந்தி ஆட்சிக்கட்டில் ஏறிவிட்டது என்பது வெளிப்படை! சில எடுத்துக்காட்டுகளை வேண்டுமானால் பார்க்கலாம். உத்தரப்பிரதேச மாநிலமே, முழுக்க இந்தி பேசும் மாநிலமில்லை. அங்கு பல்வேறு தாய்மொழிகள் உள்ளன. வடமேற்கு உ.பி.யின் தாய்மொழி பிரஜ் பாஷா. தென்மேற்கு உ.பி.யின் தாய்மொழி புத்தேல்கண்டி. வடகிழக்கு உ.பி.யிலோ போஜ்பூரி தாய்மொழி. ஆனால் எல்லா மொழிகளையும் தின்றுவிட்டு, இந்தி அங்கு ஆட்சிமொழியாக இருக்கிறது.

எட்டாவது அட்டவணை
ஹரியானா மாநில மக்கள் பெரும்பான்மையோரின் தாய்மொழி ஹரியானி என்றபோதும் அங்கும் இந்திதான் ஆட்சிமொழி. மிகப்பெரிய கொடுமை ராஜஸ்தானில் நடக்கிறது. அங்கே 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ராஜஸ்தானி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் அம்மக்களின் மொழி அங்கு ஆட்சி மொழியாக இல்லை என்பது மட்டுமில்லை, எட்டாவது அட்டவணையில் கூட அந்த மொழி இடம்பெறவில்லை. இந்தியே ஆட்சிமொழியாக உள்ளது.

இந்தியே ஆட்சிமொழி
மத்தியப் பிரதேசத்தில் இந்தி பலருக்குத் தாய்மொழியாக உள்ளது என்ற போதிலும், அங்கு உருது, அவதி, மால்வி, பகேலி போன்ற பல மொழிகள் உள்ளன. அவைகளுக்கு அங்கு எந்த மதிப்பும் இல்லை. சத்தீஸ்கரில், அவர்களின் சட்டிஸ்கரி மொழியை விட்டுவிட்டு இந்தியை ஆட்சிமொழி ஆக்கியுள்ளனர். ஜம்முவின் தாய்மொழி டோக்ரி. லடாக்கின் தாய்மொழி லடாக்கி. ஆனால் அங்கும் இந்தியே ஆட்சிமொழி என்று அண்மையில் அறிவித்துள்ளனர்.

அமித்ஷாவின் பேச்சு
எனவே இன்றைய அமித்ஷாவின் பேச்சு நாளை இந்தியா முழுவதும் உள்ள தாய்மொழிகளை அழிக்கும் முயற்சி! ஆங்கிலத்திற்கு மட்டும் எதிரானது என்று எண்ணி ஏமாந்துவிடக் கூடாது. இவற்றையெல்லாம் தொலைநோக்கோடு முன்னுணர்ந்தே பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள், தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிக் கொள்கையை விடாது வலியுறுத்தி வந்துள்ளனர். இன்றைய தலைவர் தளபதியும் அதில் உறுதியாக இருக்கிறார்.

நாட்டிற்கு நல்லதில்லை
தமிழ்நாட்டில் திராவிடத்தை ஒழிக்காமல், ஆரியத்தை நுழைக்க முடியாது, ஆங்கிலத்தை ஒழிக்காமல் இந்தி, சம்ஸ்கிருத மொழிகளை நுழைக்க முடியாது என்று உணர்ந்துள்ளனர். அதனால்தான், திராவிட எதிர்ப்பு, ஆங்கில எதிர்ப்பு என இரண்டிலும், ஆரிய இந்துக்கள், தமிழ் இந்துக்கள் இருவரும் கைகோத்துச் செயல்படுகின்றனர். அந்தச் செயல்பாடுகளின் அடுத்தடுத்த முயற்சிகள்தான், அமித்ஷாவின் பேச்சுகள்!நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், மொழிப்போரை உருவாக்குவது நாட்டிற்கு நல்லதில்லை. இந்தியாவை இன்றைய இலங்கையாக ஒன்றிய அரசு ஆக்கிவிடக் கூடாது!
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications