ஓயாத மழை.. பூண்டி ஏரியிலிருந்து 7,500 கனஅடி நீர் வெளியேற்றம் ! கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: தொடர் மழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு 6,000 கனஅடியிலிருந்து 7,500 கனஅடியாக உயர்ந்துள்ளது.
வங்கக் கடலில் சமீபத்தில் உருவான மாண்டஸ் புயலானது கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாமல்லபுரத்தையொட்டி கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அதேபோல கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனையடுத்து சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3-4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தொடர் மழை
புயல் சென்னையையொட்டி கரையை கடந்த நிலையில் பெய்த கனமழையால் சென்னையையொட்டியுள்ள நீர்த் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இன்று காலை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை இந்த அளவு மேலும் அதிகரித்துள்ளது. அதேபோல பூண்டி ஏரியிலும் தற்போது வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளது.

எச்சரிக்கை
நேற்று மாலை 500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்துக்கொண்டே இருந்தது. இதனால் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு 6,000 கனஅடியாக இருந்தது. ஆனாலும் ஏரி தொடர்ந்து நிரம்பி வருவதால் தற்போது விநாடிக்கு 7,500 கனஅடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தின் ஊத்துக்கோட்டையின் ஒத்தப்பை கிராமத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தரைப்பாலத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர் வரத்து
முன்னதாக நேற்று பூண்டி ஏரியை பார்வையிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கரைகளை உயர்த்தி கூடுதல் நீரை சேமிக்கும் திட்டம் இருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும், நேற்றைய தினம் 10,000 கனஅடி வரை நீர் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஆனால் நேற்று மாலை ஏரிக்கு நீர் வரத்து குறைந்ததால் நீர் வெளியேற்றம் 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதன் பின்னரும் படிப்படியாக நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் மழை அதிகமானதால் மீண்டும் கூடுதல் நீர் திறக்கப்படுகிறது.

மழை
வானிலையை பொறுத்த அளவில் மாண்டஸ் புயலின் கடைசி பகுதி இன்று அரபிக்கடலை நோக்கி செல்கிறது. எனவே இந்த ஈரப்பதம் காரணமாக இன்றும் நாளையும் வட தமிழ்நாட்டில் லேசான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பின்னர் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. உள் மாவட்டங்களை பொறுத்த அளவில் தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications