விஜயகாந்த்துக்கு திமுக எம்எல்ஏ திடீர் புகழாரம்.. லோக்சபா கூட்டணி உறுதியாகிறதா?
சென்னை: தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சியை திமுக துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, விஜயகாந்த்தை கூல் செய்யும் வேலையில், திமுக 2ம் கட்ட தலைவர்கள் இறங்கியுள்ளனர்.
ஓய்வுபெறும் வயதில் அரசியலுக்கு வர நினைக்கும் ரஜினி,கமலை விட விஜயகாந்த் மேலானாவர் என்று கூறியுள்ளார் திமுக சட்டசபை உறுப்பினரும், நடிகருமான வாகை சந்திரசேகர்.
அம்பத்தூரில் சென்னை கிழக்கு மாவட்ட அம்பத்தூர் வடக்கு பகுதி சார்பாக 'மக்கள் நலன் மறந்து ஊழல் ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசை கண்டித்து கண்டன பொதுகூட்டம்' என்ற பெயரில், நடைப்பெற்றது.
திமுக கூட்டம்
ஜோசப் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலார் பி.கே.சேகர் பாபு, நடிகரும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினரும் ஆன வாகை சந்திரசேகர், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் மதிமாறன் நடக்காத 2ஜி ஊழலை நடந்ததாக கூறி, மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்தன ஊடகங்கள் என்று கூறினார்.
[பரபரக்கும் தெலுங்கானா தேர்தல்.. களத்தில் 3 முக்கிய கட்சிகள்.. என்ன நடக்கும்? ]
கருணாநிதி மீது மதிப்பு
பின்னர் பேசிய வாகை சந்திர சேகர், ஓய்வுபெறும் வயதில் அரசியலுக்கு வர நினைக்கும் ரஜினி,கமலை விட விஜயகாந்த் மேலானாவர் என்றும் கருணாநிதி மீது நல்ல மதிப்பை வைத்து இருந்தவர் விஜயகாந்த் என்றும் கூறினார். வீழ்வது நாமாக இருந்தாலும் ,வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற கருணாநிதி வசனத்தை பேசியவர் விஜகாந்த் என்றும் கூறினார்.
பேச்சின் முக்கியத்துவம்
ரஜினி,கமல்,விஜய் போன்றோர் பொதுவாழ்க்கையில் மக்களுக்காக என்ன செய்தீர்கள்? உடனே திராவிட கட்சிகளை ஒழிக்க போவதாகவும், புது மாற்றத்தை கொண்டு வரபோவதாக கூறி என்ன செய்ய போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார் வாகை சந்திரசேகர். திமுக எம்எல்ஏ மட்டுமல்லாது, அக்கட்சி மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பை நீண்டகாலமாக பராமரித்து வருபவர் வாகை சந்திரசேகர்.
கருணாநிதியின் காத்திருப்பு
எனவே வாகை சந்திரசேகரின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக கூட்டணியை பெற அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி எவ்வளவோ முயற்சிகளை எடுத்தார். காத்திருந்தார். பழம் கனிந்துவிட்டது, பாலில் விழ காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார். ஆனால், வைகோ உள்ளிட்டோர் உருவாக்கிய அணியுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். இந்த அணிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி, திமுகவும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு நெருங்கி வந்து, பிடிக்க முடியாமல், மீண்டும் அதிமுகவிடம் கோட்டைவிட வேண்டியதாயிற்று.
கூட்டணியில் தேமுதிக
இந்த நிலையில்தான், இம்முறையாவது தேமுதிகவை, திமுக தனது கூட்டணிக்கு ஈர்க்க முயல்கிறதோ என்ற ஐயத்தை, வாகை சந்திரசேகர் பேச்சு எழுப்பியுள்ளது. சமீபகாலமாக திமுகவை விமர்சனம் செய்வதை விஜயகாந்த் நிறுத்திவிட்டார். கருணாநிதி மறைவையடுத்து கண்ணீர் விட்டு விஜயகாந்த் கதறிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், விஜயகாந்த்தை தங்கள் பக்கம் கொண்டுவரும் முயற்சியை திமுக துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திமுக திட்டம்
காங்கிரஸ் கட்சி மதில் மேல் பூனையாக உள்ளது. எனவே அதற்கு அடுத்ததாக மாநிலம் முழுக்க பரந்து விரிந்த தேமுதிகவை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள திமுக விரும்புவதாக தெரிகிறது. விஜயகாந்த்துக்குமே இதுதான் இப்போது பெஸ்ட் ஆப்ஷனாக பார்க்கப்படுகிறது. எனவே கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் கனிந்த பழம், வரும் லோக்சபா தேர்தல் நேரத்தில் பாலில் விழும் என்று கட்டியம் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.