அடேங்கப்பா.. இது லிஸ்ட்லயே இல்லயே - டெல்லிக்கு ஓபிஎஸ் அனுப்பப்போகும் கடிதம்.. எடப்பாடிக்கு "செக்!?"
சென்னை : 'இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே?' எனச் சொல்லும் வகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு அளித்த கடிதத்தை ஏற்றுகொள்ளும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுத இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தான் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளாராம்.
இந்நிலையில், பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து செயல்படலாம் என ஈபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்.
ஆனால், அதனை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ள நிலையில், அதிரடி அட்டாக் முயற்சியாக, எடப்பாடி பழனிசாமி தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினிமா செய்ததை ஏற்றுக்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கு...எடப்பாடி பழனிசாமி அப்பீல்..ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் கேவியட் மனு
அதிரடி தீர்ப்பு
அதிமுகவில் ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தற்போது பொதுச் செயலாளர் பதவி கிடையாது என்பதாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே நியமித்த நிர்வாகிகளின் பதவிகளும் இல்லாமல் போகிறது.
இணை ஒருங்கிணைப்பாளர் யார்?
நீதிமன்ற தீர்ப்பின்படி பார்த்தால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தான் இருக்கிறார்கள். அதேநேரத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ஈபிஎஸ் ராஜினாமா செய்துவிட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். இதனால் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தான் என்று குட்டையைக் குழப்புகின்றனர் ஓபிஎஸ் அணியினர்.
ஈபிஎஸ் ராஜினாமா
பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தாக்கல் செய்த மனுவில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துவிட்டார். இதனால், அவர் பொதுக்குழு எடுத்த முடிவின்படி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், இந்த ராஜினாமா பற்றி தேர்தல் ஆணையம் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. இதனால், தற்போதைக்கு ஈபிஎஸ்-ஸையே இணை ஒருங்கிணைப்பாளராக கருத முடியும்.
நோ சமாதானம்
இதற்கிடையே, தீர்ப்பை முன்வைத்து, கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமிக்கு தூது விட்டார். சாதகமான தீர்ப்புக்குப் பின்னர் இறங்கி வந்த ஓபிஎஸ், நேரடியாகவும் ஈபிஎஸ்ஸூக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அதனை ஏற்க மறுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. கட்சி பொதுக்குழுவில் தங்களுக்கான செல்வாக்கை நிரூபித்து ஒற்றைத் தலைமைக்கான நாற்காலியில் அமர்வோம் என்று உறுதியாக கூறுகின்றனர் ஈபிஎஸ் தரப்பினர்.
அடுத்தகட்ட திட்டம்
இந்த விவகாரங்களைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குச் சென்றுள்ளார். அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் 3 நாட்கள் தனது வீட்டில் தங்கி இருந்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது வீட்டில், முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து வரும் ஓபிஎஸ், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்கள் உடனும் கலந்தாலோசித்து வருகிறார்.
கடிதம் அனுப்ப திட்டம்
இந்நிலையில் தான் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்க ஓபிஎஸ் தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இணைந்து பணியாற்ற இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தும் அவர் ஏற்கவில்லை என்பதால், முன்பு ஈபிஎஸ், தேர்தல் ஆணையத்தில் தனது ‘இணை ஒருங்கிணைப்பாளர்' பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்ததை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்திற்கே கடிதம் எழுதத் தயாராகி வருகிறாராம் ஓபிஸ்.
லிஸ்ட்லயே இல்லயே
நீதிமன்ற தீர்ப்பின்படி இரு தலைமையும் இணைந்து பொதுக்குழுவை நடத்த வேண்டும். இணைந்து செயல்படும் முயற்சிக்கு ஓபிஎஸ் அழைத்தும், ஈபிஎஸ் தயாராக இல்லை என்பதால், அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவை வைத்தே ஈபிஎஸ் வகிக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை காலி செய்ய திட்டம் தீட்டியுள்ளது ஓபிஎஸ் டீம். தேர்தல் ஆணையம், ஈபிஎஸ்ஸின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டால், மீண்டும் நீதிமன்றத்துக்குச் சென்றாலும், ஈபிஎஸ்ஸுக்கு பெரிய சிக்கல் ஏற்படலாம்.
ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்
பின்னர், தான் இணை ஒருங்கிணைப்பாளராக நியமித்த வைத்திலிங்கத்தையே இணை ஒருங்கிணைப்பாளராக அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் மூலம் ஆக்கிவிடலாம் எனக் கணக்கு போட்டுள்ள ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ராஜினாமா செய்த கடிதத்தை ஏற்றுகொள்ளும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் கடிதம் அனுப்ப இருக்கிறார் என்று கூறப்படுகிறது.