ராகுல் காந்தி தேடுவது கடவுளையா? பிரச்சனையா?.. நடிகை கஸ்தூரிக்கு வந்த திடீர் ‛டவுட்’! சுளீர் கேள்வி
சென்னை: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடனான சந்திப்பு சர்ச்சையான நிலையில் ‛‛ராகுல்காந்தி கடவுளை தேடுகிறாரா அல்லது பிரச்சனையை தேடுகிறாரா?'' என நடிகை கஸ்தூரி கேள்வியுடன் ‛டவுட்' ஒன்றை கேட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை மக்கள் மத்தியில் பிரபலமாக்கவும், கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் ‛பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி துவங்கி உள்ளார்.
கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து இந்த நடைப்பயணம் துவங்கி கேரளாவில் நுழைந்துள்ளது. இன்று கேரளாவில் நடைப்பயணம் நடந்தது.

ஜார்ஜ் பொன்னையாவுடன் சந்திப்பு
முன்னதாக தமிழகத்தில் நடந்த நடைப்பயணத்தின்போது ராகுல்காந்தி பல்வேறு நபர்களை சந்தித்து பேசினார். அப்போது சர்ச்சை பாதிரியாரான ஜார்ஜ் பொன்னையாவுடன் அவர் சந்தித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியானது. அதாவது ராகுல் காந்தி,‛‛இயேசு கடவுளா? இல்லை கடவுளின் குழந்தையா?'' என கேட்டார். அதற்கு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, ‛‛இயேசு கடவுள்தான். அவரை கடவுளின் உருவம், கடவுளின் குழந்தை என சொல்ல முடியாது. அவர் தான் உண்மையான கடவுள். பிற சக்திகள் போல் அல்ல'' என கூறினார்.

வீடியோவால் சர்ச்சை
இந்த வீடியோ இணையதளங்களில் பரவி சர்ச்சையானது. பாஜக சார்பில் ராகல்காந்தி மற்றும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுல்காந்தி-பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் உரையாடலின் அர்த்தத்தை பாஜகவினர் திரித்து கூறுகின்றனர் என கூறியது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பாதிரியார் ஸ்டோன்ஸ் சுவாமி நினைவஞ்சலி கூட்டத்தில் சர்ச்சையாக பேசியபோது கைது செய்யப்பட்டார்.

மடாதிபதி சந்திப்பின் சர்ச்சை
ராகுல்காந்தி தற்போது பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்து சர்ச்சையானது போலவே கடந்த மாதம் இந்து மடாதிபதியை சந்தித்தது சர்ச்சையானது. அதாவது கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் முருகா மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக உள்ள சிவமூர்த்தி முருக சரணாருவை சமீபத்தில் ராகுல் காந்தி சந்தித்து லிங்க தீக்சை பெற்றார். இந்த சம்பவம் நடந்த அடுத்த சில வாரங்களிலேயே மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணாரு 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானர். இந்நிலையில் தான் நடிகை கஸ்தூரிக்கு டவுட் ஒன்று ஏற்பட்டுள்ளது.

நடிகை கஸ்தூரி கேள்வி
இந்நிலையில் தான் கர்நாடக மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணாரு மற்றும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஆகியோரை சந்தித்த ராகுலின் படத்தை பதிவிட்டு நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‛‛ராகுல்காந்தி கடவுளை காண செல்கிறாரா இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க செல்கிறாரா?. இந்த 2 பேரும் ராகுல் காந்தியின் எபேக்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்ற வகையில் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications