வசூல் விளம்பரம், வாட்ஸ் அப்பால் வினை.. அம்பலமான ”அன்பு” ரகசியம்! கோலிவுட்டுக்கு ஐடி கிடுக்குப்பிடி
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை, சினிமா படங்கள் ரூ.100 கோடி, ரூ.500 கோடி, ரூ.1000 கோடி வசூலித்ததாக வெளியிடப்படும் விளம்பரங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வாட்ஸ் அப் உரையாடல்கள் காரணமாகவே நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மதுரை அன்பு என்று அழைக்கப்படும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவிலான சினிமாக்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் அன்புச்செழியனிடமே கடன் பெற்று திரைப்படங்களை தயாரித்து வருகின்றன.
இந்த நிலையில்தான் கடந்த 4 நாட்களாக அன்பு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகள் கடந்த 2 ஆம் தேதி அதிகாலை 5:30 மணி முதல் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள திரையரங்கம் என பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
“சிண்டிகேட்” - சிக்கிய தயாரிப்பாளர்கள்.. ”அன்போடு” பிடிபடும் பெரும் தலைகள்! சிக்கலில் தமிழ் சினிமா
தயாரிப்பாளர்கள்
இதேபோல், முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தயாரிப்பு நிறுவன தலைவர் தியாகராஜன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தலைவர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவன தலைவர் ஞானவேல் ராஜா, வி கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவன தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா உள்ளிட்டோரின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.
அறிக்கை
மேலும் மதுரை அன்புவிடம் நிதிபெற்று திரைப்படங்களை தயாரித்த 20 முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த வருமான வரித்துறை சோதனையில் உட்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது. 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் முடிவடைந்ததை தொடர்ந்து வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் அலசி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.
சிண்டிகேட்
இதில் ரூ.200 கோடி முறையற்ற வருவாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ.3 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இதேபோல், தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் சிண்டிகேட் அமைப்பை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
சிக்கியது எப்படி?
இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர்கள் அந்தனன் மற்றும் பிஸ்மி பல்வேறு தகவல்களை வெளியிட்டு உள்ளனர். "சினிமா தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் தொடர்பை ஏற்படுத்தும் மீடியேட்டர்களுக்கு பல ரகசியங்கள் தெரியும். இதனை அறிந்த வருமான வரித்துறையினர் அவர்களையும் இம்முறை விசாரித்து சோதனையிட்டு உள்ளனர். அவர்கள் மூலமாகவே ஜஸ்வந்த் பண்டாரி போன்ற பல பைனான்சியர்கள் சிக்கியுள்ளனர்.
மெகா ஐடி ரெய்டு
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே மிகப்பெரிய ஐடி ரெய்டு. டெல்லியிலிருந்து வந்த 350 அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சோதனையிட்டு உள்ளார்கள். வாட்ஸ் அப் உரையாடல்களை வைத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் பலரை பிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி திரைப்படங்களின் வசூல் நிலவரங்கள் தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்கள் ஆயிரம் கோடி, 500 கோடி, 100 கோடி வசூல் என வெளியிடும் விளம்பரங்களும் இதற்கு ஒரு காரணம். ஆயிரம் கோடி வசூல் என்று போட்டுவிட்டு ரூ.300 கோடியே கணக்கு காட்டுவதால் வருமான வரித்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது." என்றனர்.