பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் பதவி... தென் மண்டலத்திற்கு கிரிஜா வைத்தியநாதன் வேண்டாம் -ஜவாஹிருல்லா
சென்னை: கிரிஜா வைத்தியநாதனை தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்குப் பதிலாக வட மண்டல அல்லது மேற்கு மண்டல அமர்வில் உறுப்பினராக நியமிக்குமாறு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதற்கான காரணத்தை கூறி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு;
''பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதனை நியமித்தது செல்லும்" என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
''ஒன்பது மாதங்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராகவும், 19 மாதங்கள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும், சுகாதாரத் துறைச் செயலாளராகவும் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு கிரிஜா வைத்தியநாதன் பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராகத் தகுதி பெறுகிறார் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கின்றது.''
''அரசு நிர்வாக ரீதியிலான பொறுப்புகளைக் கவனித்ததினால் மட்டுமே அவரை நிபுணத்துவம் பெற்றவராகக் கருத முடியாது என்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வாதத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது வேதனையை தருகின்றது.''
பணம் பதுக்கல்;பணி செய்யவில்லை; குவியும் புகார்கள்.. நிர்வாகிகள் மீதான ஆக்ஷனை திடீரென நிறுத்திய EPS
''கிரிஜா வைத்தியநாதன் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் தவறான முன்னுதாரணத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் காட்டியுள்ளது. நிர்வாக ரீதியாகப் பெற்ற அனுபவத்தை நிபுணத்துவமாகக் கருதுவது, யார் வேண்டுமென்றாலும் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்வதற்கு வழிவகுக்கும்.''
''இச்சூழலில் பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கிரிஜா வைத்தியநாதன் நிபுணத்துவ உறுப்பினராகப் பொறுப்பேற்றால் அவர் தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்படும் வழக்குகள் குறித்து முடிவு செய்யும் நிலை கிரிஜா வைத்தியநாதனுக்கு ஏற்படும்.''
''இது அறநெறி முறைகளுக்கு முரணாக அமையும். எனவே கிரிஜா வைத்தியநாதனை தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்குப் பதிலாக வட மண்டல அல்லது மேற்கு மண்டல அமர்வில் உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.''