ராயபுரம் எம்எல்ஏ யாருனு கேட்டா சின்னக்குழந்தை கூட ஜெயக்குமார்னுதான் சொல்லும்.. மாஜி அட்டாக்
சென்னை: பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் சென்னையில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இதனால் மக்கள் கடும் அவதியடைகிறார்கள். எனவே சாலைகளை திமுக அரசு சரி செய்ய வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை மூட வேண்டும். ஜெயலலிதா விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.
”மாமியார் உடைத்தா மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்” பரந்தூர் விமான நிலையம் பற்றி ஜெயக்குமார்!
ஏழைகள்
இவற்றின் மூலம் பல ஏழை பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கான செலவு இல்லாமல் இருந்தது அவர்களது பெற்றோருக்கு மனநிம்மதியை கொடுத்தது. ஆனால் இந்த அரசு தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டது. அதற்கு பதிலாக மாணவிகளுக்கு ரூ 1000 திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு
அது போல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மிக மோசமாக இருக்கிறது. எட்டு வழிச் சாலை என்பது நல்ல திட்டம். ஆனால் திமுக அரசோ எட்டு வழிச்சாலையை அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்திவிட்டு தற்போது அந்தர் பல்டி அடிக்கிறார்கள். பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் வீடு தருகிறோம். பணம் தருகிறோம் என 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து விவசாயத்தை ஒழித்து அதன் மீது விமான நிலையம் அமைக்க வேண்டுமா?
விவசாயிகள் போராட்டம்
இதை எதிர்த்துத்தான் விவசாயிகள் போராடி கொண்டிருக்கிறார்கள். அரசு விவசாயிகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது.
ராயபுரம் எம்எல்ஏ
ராயபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ மூர்த்தி பெயருக்குத்தான் எம்எல்ஏவாக இருக்கிறார். தொகுதியில் எந்த ஒரு பணியும் செய்யாமல் அரசிடம் சம்பளம் மட்டுமே வாங்குகிறார். ஆனால் தொகுதிக்கு வருவதே இல்லை. இப்போது ராயபுரம் தொகுதிக்கு யார் எம்எல்ஏ என சின்ன குழந்தையிடம் கேட்டாலும் என் பெயரைத்தான் சொல்வார்கள், அவர்களுக்கு என்னை தெரியும், திமுக எம்எல்ஏவை தெரியாது என ஜெயக்குமார் தெரிவித்தார். கடந்த 1991, 2001, 2011 மற்றும் 2016 ஆகியஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயக்குமார் வென்றார். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் இரா மூர்த்தியிடம் தோல்வி அடைந்தார்.