ஆளுநர் ரவிக்கு தமிழகத்தில் பெரிதாக வேலை இருக்காது... கொங்கு ஈஸ்வரன் நம்பிக்கை..!
சென்னை: தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவிக்கு, இங்கு பெரிதாக வேலை இருக்காது எனக் கூறுகிறார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன்.
புதிய ஆளுநர் மூலம் தமிழக அரசுக்கு மத்திய அரசு செக் வைக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதனிடையே தமிழக ஆளுநராக பதவியேற்ற 12 மணி நேரத்திற்குள் ஆர்.என். ரவி மகாபலிபுரத்தை பார்வையிடச் சென்றது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் மக்களை ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக்கும் வங்கி.. அதிர வைக்கும் பின்னணி
புதிய ஆளுநர்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ரவி, 1976 ஆம் ஆண்டு கேரள மாநில ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 2014 ஆம் ஆண்டு முதல் கூட்டுப் புலனாய்வுக் குழுவின் தலைவராகவும், 2018 ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பணியாற்றினார்.
காவல்துறை
காவல்துறை பின்புலம் கொண்ட ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது முதல், இங்கு கடும் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு படி மேலே சென்று, ஸ்டாலினுக்கு இடையூறு ஏற்படுத்தவே புதிய ஆளுநராக ரவி நியமிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் கிளப்பினார். அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பலரும் ரவிக்கு எதிராக அறிக்கை விடத் தொடங்கினர்.
வேலை இருக்காது
இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தலைவர் ஈஸ்வரன், புதிய ஆளுநர் நியமனம் குறித்து தெரிவித்த கருத்தில், மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தை நினைக்கத் தேவையில்லை என்றும், இங்கு புதிய ஆளுநர் ரவிக்கு பெரிதாக வேலை எதுவும் இருக்காது என கருதுவதாகவும் கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசே ஆட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் என்பதை உறுதிப்படக் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல்
இதனிடையே எதிர்வரும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உழைக்கும் என அவர் தெரிவித்தார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சுமார் 15 நிமிடங்கள் வரை தனியாக சந்தித்து ஆளுநர் நியமனம், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து கொங்கு ஈஸ்வரன் ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.