"ஹிஜாப் விவகாரம்.. எனது நிலைப்பாடு இது தான்.." பிரசாரத்தில் விளக்கிய குஷ்பு
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக குஷ்பு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் வரும் பிப்.19இல் நடைபெற உள்ளது.
இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிமுக உடன் இணைந்து பயணித்து வந்த பாஜக இந்த முறை தனித்துக் களமிறங்குகிறது.
நானும் இஸ்லாமிய பெண்தான்..ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்றதில்லை..பார்த்ததுமில்லை -பாஜக குஷ்பு கருத்து
நடிகை குஷ்பு
பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சென்னையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொதுமக்களுக்குச் சேவை செய்யவே பாஜகவினர் அரசியலுக்கு வந்துள்ளோம். இங்கு யாரும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்காகச் சேவை செய்வதில்லை.
தொண்டர்கள் உற்சாகம்
பாஜகவுக்குப் பொதுமக்களிடையே செல்வாக்கு இல்லை என்று கூறினார்கள். ஆனால் கடந்த தேர்தலில் 4 எம்எல்ஏக்களை நாங்கள் சட்டசபைக்கு அனுப்பியுள்ளோம். இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுபவர்கள் துணிச்சலுடன் போராடுவார்கள். அதைவிட்டுவிட்டு யார் இரவு நேரத்தில் பாஜக தலைமை அலுவலகத்தில் குண்டு வீசுவார்களா? இதில் கைது செய்யப்பட்ட நபருக்கும் நீட் தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை.
நீட் தேர்வு
பாஜக அரசு முதலில் நீட்டை கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு நடைபெறுகிறது. உச்ச நீதிமன்றத்தில் சென்று நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுங்கள். பாஜகவிற்கு எதிராகப் போராடுவது நியாயமில்லை. நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. மருத்துவக் கல்லூரி வைத்துள்ளவர்களுக்குத் தான் நீட் தேர்வால் பாதிப்பு. பொதுமக்களுக்கு அனைத்தும் புரியும்.
ஹிஜாப்
பாஜக மூத்த தலைவரான அத்வானி தமிழகம் வந்த போது குண்டு வைக்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்தது யார் என அனைவருக்கும் தெரியும். இப்போது மீண்டும் கமலாலயத்தில் குண்டு வீசப்பட்டுள்ளது யார் ஆட்சியில் உள்ளனர் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஹிஜாப் விவகாரத்தைப் பொறுத்த வரை பள்ளிக்குள் ஜாதி மதங்களைக் கொண்டு வருவது தவறு. பூணூலை ஆடைக்குள் தான் போட்டிருப்பார்கள். எனவே அதில் தவறில்லை" என்று கூறினார்.