ஆஹா.. ரொம்ப நீளமா இருக்கே.. வாய் பிளந்து பார்த்த வாடிக்கையாளர்கள்.. டெமோ காட்டிய ஆடு!
ஜோத்பூரிலிருந்து நீளமான வால் உடைய ஆடுகள் வரவழைக்கப்பட்டன.
சென்னை: "என்னடா "இது" இவ்வளவு பெரிசா இருக்கு..." என்று ஆவென வாயை பிளந்து பார்த்தார்கள். அது ஒரு ஆட்டின் வால்தான்!
"வேற என்ன பண்றது? எவ்வளவோ விளக்கம் கொடுத்தாச்சு.. நிறைய பேசியாச்சு.. இப்படி கொண்டு வந்து காட்டினாலாவது நம்புவாங்கன்னுதான் இதை கொண்டு வந்தேன்" என்கிறார் தமிழ்செல்வன்!!
எழும்பூர் ஸ்டேஷனில் நாய்க்கறின்னு பறிமுதல் செய்ததிலிருந்து ஹோட்டல் பக்கமே நான்-வெஜ் பிரியர்கள் போவது குறைந்து விட்டது. ரயிலில் வந்திறங்கியது நாய்க்கறிதானா இல்லையான்னு தெரியறதுக்கு முன்னாடியே வதந்தி பரவி... அந்த வதந்தி நிஜம் என்றே நம்பி.. கடைசியில் பாய் கடை பிரியாணி கடைகளில் கூட்டம் குறைந்ததுதான் மிச்சம்!
அச்சம் போகவில்லை
பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறி இல்லை, அது ஆட்டுக்கறிதான் என்று 6 நாள் கழித்து ஆய்வில் தெரிந்துவிட்டது சந்தோஷம்தான். ஆனால் பீதி குறையலையே... மக்கள் எந்த கறியை பார்த்தாலும் சந்தேகத்துடனே பார்த்து வருகிறார்கள். அப்போ இவ்வளவு நாளா நாம சாப்பிட்டது நாய்க்கறிதானா என்ற அச்சம் போகவே இல்லை.
சென்னை வரவழைத்தார்
அதற்காக பொதுமக்களிடம் இந்த பீதியை போக்க தென் சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் தமிழ்செல்வன் முன் வந்துள்ளார். மக்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை, வேற வழியில் சென்றுதான் மக்கள் கலக்கத்தை போக்க வேண்டும் என்று முடிவு செய்த இவர், நேரடி டெமோவில் இறங்கி விட்டார். அதற்காக ஜோத்பூரில் இருந்து வால் நீளமான ஆடுகளை சென்னைக்கே வரவழைத்து விட்டார்.
நீளமான வால்
அப்போது பேசிய அவர், "பெரும்பாலும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் வெளி மாநில ஆடுகள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஏன் என்றால், இங்கே ஆட்டுக்கறி கிலோ 600 ரூபாய் விற்கிறார்கள். ஆனால் ஜோத்பூரில் 1 கிலோ 300 ரூபாதான். பாதிக்கு பாதி. அதுவும் இல்லாம, அங்க இருக்கிற ஆடுகளுக்கு வால் நீளமா இருக்கும்.
விலையும் குறைவு
ருசியும் நல்லா இருக்கும். அதனாலதான் வெளி மாநிலங்களிலிருந்து மட்டன் வாங்க வேண்டிய நிலைமை ஆயிடுது. ஆனால் இப்படி ரயிலில் கொண்டு வரக்கூடாது. ஆட்டை நல்லா வெட்டி, சுத்தமாக கழுவிட்டு, அது கெட்டு போகாத மாதிரி ஐஸ் பெட்டியிலதான் வெச்சி, ஏசி கண்டெய்னரில்தான் கொண்டு வர வேண்டும். இதுதான் விதி. ஆனால் இப்படி சாதாரண பார்சல்களில் கொண்டு வரக்கூடாது" என்று சொன்னார்.
லைவ் டெமோ
இப்படி லைவ்-ஆக கொண்டு வந்து தமிழ்செல்வன் ஆட்டை காண்பித்தும் மக்கள் பீதி குறையுமா என்று பார்ப்போம்!!