கனிம வளங்கள் என்பது அரசின் சொத்துகள்.. கொள்ளையடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை.. சென்னை ஐகோர்ட்
சென்னை: அரசின் சொத்துக்களான கனிம வளங்களை உரிமம் இல்லாமல் கொள்ளையடிப்பவர்களைக் கடுமையான முறையில் கையாள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்குத் துரோகம் செய்து விட்டதாகவும், கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, அரசின் சொத்துக்களான கனிம வளங்களைச் சட்ட விரோதமாகக் கொள்ளையடிக்கும் செல்வாக்கான நபர்களை அரசு, கடுமையாகக் கையாள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினர்.
உரிமம் இல்லாமல் கனிம வளங்கள் எடுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இந்த விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திய நீதிபதிகள், இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசுக்குத் தெரிவித்து விசாரணையை ஜூன் 29ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications