ஒரே நாளில் 2 தேர்வுகள்? தமிழக தேர்வர்களுக்கு அநீதி.. “வாசலையே அடைப்பதா?” - சு.வெங்கடேசன் ஆவேசம்!
சென்னை : எஸ்.எஸ்.சி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கசேடன் மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்.எஸ்.சி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள அதே நாளில் தமிழக கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் இருப்பதால், மாணவர்கள் ஏதாவது ஒரு தேர்வையே எழுதும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார் சு.வெங்கடேசன்.
ஏற்கனவே, மத்திய அரசு தேர்வுகளில் தமிழர்கள் நியமனம் பெறுவது வெகுவாக குறைந்துள்ள நிலையில், இப்போது வாசலையே இழுத்து மூடுவதா என சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியை மத்திய அரசு குறைத்தது.. தமிழக அரசு உயர்த்தியது.. சு வெங்கடேசன்!
மதுரை எம்.பி கடிதம்
தமிழக கல்லூரிகளில் முதுநிலை படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ள அதே நாளில் மத்திய பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக நடைபெற உள்ள தேர்வை தள்ளி வைக்கக் கோரி பணியாளர்கள் தேர்வு ஆணையம் மற்றும் இந்திய வானியல் துறைக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
எஸ்.எஸ்.சி தேர்வு
சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள கடிதத்தில், மத்திய தேர்வாணையம் அக்டோபர் 31ஆம் தேதியன்று வெளியிட்ட அறிவிக்கையின் படி ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகள் ( Combined Graduate level Examinations (Tier 1) அறிவியல் உதவியாளர் (Scientific Assistant in IMD Examinations) பதவிக்கு டிசம்பர் 14ஆம் தேதி முதல் 16க்குள்ளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வுகள்
இதே தேதிகளில் தமிழக கல்லூரிகளில் முதுகலைப் பட்ட செமஸ்டர் தேர்வுகள் இருப்பதால் இந்த பணி நியமன தேர்வுகளில் பங்கேற்க இயலாத நிலை ஏற்படும். கடந்த காலங்களில் மத்திய அரசு துறை/ நிறுவனங்களின் பணி நியமனங்களில் உரிய பங்கு தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என்ற நிலைமைகள் இருந்துள்ளன.
ஏற்கனவே இந்த நிலை
2011 இல் அறிவியல் உதவியாளர் தேர்வுகளில் வெற்றி பெற்ற 465 பேரில் 3 பேர், 2017 இல் வெற்றி பெற்ற 1165 பேரில் ஒரே ஒருவர் மட்டுமே தமிழர் என்ற தகவல்கள் தரப்படுகின்றன. 2022 இல் வாசலே இழுத்து மூடப்படுவது போல தேதிகள் உள்ளன. ஆகவே தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் என எஸ்.எஸ்.சி மற்றும் இந்திய வானியல் துறைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.