காலையில் காங்கிரசுடன்… மாலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை
சென்னை: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் சுமூக முடிவு ஏற்பட்டதாகவும், ஓரிரு நாட்களில் மு.க. ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் குழுவினருடன் காலையில் காங்கிரஸ் கட்சியும், மாலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தின.
மிரண்டு போய் ; அரண்டு போய் உள்ளார் மு.க. ஸ்டாலின்... முதல்வர் காரசார பேச்சு
முத்தரசன் பேட்டி
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன் கூறியதாவது: பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்தது. போட்டியிட விருப்பமான 6 இடங்களை திமுகவிடம் கொடுத்துள்ளதாகவும், அதில் இரண்டு இடங்களை தேர்வு செய்து ஓரிரு நாட்களில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறினார்.
ஓரிரு நாட்களில் அறிவிப்பு
முன்னதாக, திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகள் எவை என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், சௌந்தரராஜன் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஓரிரு நாட்களில் தொகுதி அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக கூறினார்.
மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
காலையில் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாலையிலும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணி கட்சிகள்
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
காங்கிரஸ் போட்டியிட விருப்பம்
நெல்லை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என தனி தொகுதியில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க காங்கிரஸ் கேட்டுள்ளதாகவும். ஈரோடு, கரூர் ,ஆரணி, அரக்கோணம், தேனி, தொகுதியில், சிவகங்கை ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.