அடுத்த 2 மணி நேரம்.. 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்னும் மழை பெய்து வருகிறது.
இதனை தொடர்ந்து தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இனி வரும் மழையையும் எதிர்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

அடுத்த 2 மணி நேரம்
இந்த நிலையில் தமிழ்நாடு - கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று முதல் வரும் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
குறிப்பாக அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயலாக வலுப்பெறுமா?
இதனைதொடர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் 16ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில், அது கரையை நோக்கி நகரும் போது வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது எனவும் புயலாக வலுப்பெறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதனால் அடுத்த சில நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications