எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயணத் திட்டம்.. சுற்றுலா துறை அமைச்சர் அறிவிப்பு
சென்னை: சென்னையில் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் எனும் திட்டத்தை தொடங்குவதாக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக சட்டசபையில் அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில் பொது தனியார் பங்களிப்புடன் Hop On, Hop Off என்ற திட்டம் செயல்படுத்தப்படும். சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் என்ற திட்டத்திற்கு ரூ 1.50 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ 15 கோடியில் மேம்படுத்தப்படும். சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் திருப்பதி சுற்றுலாவுக்கு தினசரி தரிசன நுழைவுச் சீட்டை 1000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் சிலைக்கு செல்ல கன்னியாகுமரியில் ரூ 7 கோடி மதிப்பில் கூடுதலாக புதிய படகு இறங்குதளம் அமைக்கப்படும்.
கன்னியாகுமரி முட்டம் கடற்கரை, திற்பரப்பு நீர் வீழ்ச்சி, சுற்றுலா தலங்கள் ரூ 6.60 கோடியில் மேம்படுத்தப்படும். வண்டலூர், கோவளம், ஏற்காடு சுற்றுலாத் தலங்களில் ரூ 75 லட்சம் மதிப்பில் சிறு உணவகங்கள் அமைக்கப்படும்.
4 முக்கிய கோயில்களில் முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி - ஒளிக்காட்சி அமைக்கப்படும். சென்னையில் நடந்தது போல 'நம்ப ஊரு' திருவிழா போன்று அனைத்து பகுதிகளிலும் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில், புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலாத்துறை சார்பில் எங்கும் ஏறலாம் - எங்கும் இறங்கலாம் என்ற பேருந்து சேவை துவக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள், ஆட்டோ மற்றும் காரில், அதிக கட்டணம் செலுத்தி, முக்கிய இடங்களை பார்வையிட்டு வரும் நிலையில், இந்த பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 50 ரூபாய் குறைந்த கட்டணத்தில், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, இந்தப் பேருந்தில் பயணம் செய்யலாம்.