மின் கட்டணம் செலுத்த கூட ஆதார் இணைப்பது கட்டாயமா? இலவச மின்சாரம் குறித்தும் செந்தில் பாலாஜி விளக்கம்
கோவை: மின்வாரிய இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மின்வாரிய இணைப்பு எண்ணுடன் ஆதர் எண்ணை இணைக்கும் பணிகள் இப்போது தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளைத் தமிழ்நாடு மின்வாரியம் எடுத்து வருகிறது.
இதற்கிடையே இந்த பணிகளால் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பது தடைப்படலாம் என்பது போன்ற தகவல்கள் இணையத்தில் பரவின. அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்துத் தொடர்ந்து விளக்கமளித்து வருகிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இதனிடையே ஆதார் எண் இணைப்பு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றொரு முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். கோவை பீளமேடு பகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 3,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கோவை வளர்ச்சி பணிகள்
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 45ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 3,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம். கோவையில் இருக்கும் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். ரூ 211 கோடி மதிப்பில் கோவையில் புதிதாகச் சாலை அமைக்கும் பணிகளை ஆரம்பித்து உள்ளோம். இதில் ஏற்கனவே பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கும் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டது. வரும் மார்ச் மாதத்திற்குள் இதற்கான நிதி முழுமையாக விடுவிக்கப்பட்டு, பழுதடைந்த சாலைகள் விரைவாகப் புதுப்பிக்கப்படும்.

கோவை ஏர்போர்ட்
மேலும், கோவையில் விமான நிலைய விரிவாக்க பணிகள் ஏற்கனவே 90% முடிந்துவிட்டது. மீதமுள்ள 10% பணிகளும் மிக விரைவாக அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் முடிவடையும். அதிமுக ஆட்சியில் நடந்த வளர்ச்சி திட்டங்களை, 5 ஆண்டுகளுக்குள் நம் முதலமைச்சர் இரட்டிப்பாக்கித் தருவார். கோவைக்குத் தேவையான வளர்ச்சி பணிகளை முதல்வர் ஸ்டாலினே கவனித்து மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக எம்எல்ஏக்கள்
கோவையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் தான் சாலை மோசமடைந்ததா? அதிமுக ஆட்சியில் போடாத சாலையை இப்போது போட வேண்டும் என்று தான் பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். கோவையில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முறையான அழைப்பு தரப்படுகிறது. ஆனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் கலந்து கொள்வதில்லை.

தொழில்துறையினர்
சிறு, குறு நடுத்தர தொழில்துறையினர் உத்தேச மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று வைத்து கோரிக்கையின் அடிப்படையில் 10 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டது. மத்திய அரசு அழுத்தத்தால்தான் கட்டண உயர்வைக் கொண்டு வர நேர்ந்தது. எனவே மின் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் எனச் சொல்வது ஏற்புடையதல்ல. இப்போதும் கூட மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைந்த கட்டணமே உயர்த்தப்பட்டுள்ளது.

வாய்ப்பே இல்லை
தொழில் துறையினர் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. தொழில் துறையினர் குறைந்த அளவிலான மின் கட்டண உயர்விற்கு ஆதரவளித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய எப்படி முடியும்? மின்சாரத் துறைக்கு 1.51 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது. எனவே, இப்போதுள்ள சூழலை மின் கட்டண உயர்வை ரத்து செய்யச் சொல்வது சரியானது இல்லை.

மின் கட்டணம் செலுத்த ஆதார்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அதிமுக, பாஜகவினர் அவதூறு பரப்புகிறார்கள். மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கவில்லை என்றாலும் மின் கட்டணம் செலுத்தலாம். அதற்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது நல்லது தான். மேலும், மிகவும் அவசியமானதும் கூட. சில இடங்களில் மின் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அவர் உயிரிழந்தும் கூட இருக்கலாம்.

ஆதார் இணைப்பு
அவர்களுக்குப் பெயர் மாற்றம்.. மேலும், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தேவையான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையைச் சீர் திருத்தம் செய்ய ஆதார் எண் இணைப்பது அவசியம். ஆனால், இதனால் இலவச மின்சாரத்திற்கு ஆபத்து, மின் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறுவது எல்லாம் சுத்தப் பொய்" என்று அவர் விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications