உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் சாட்சியங்களை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு தவறிவிட்டது- மு.க.ஸ்டாலின்
சென்னை: உடுமலைப்பேட்டை சங்கர் ஜாதி ஆணவப்படுகொலை வழக்கில் சாட்சியங்களை நிரூபிப்பதில் அரசு தரப்பு தவறிவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கான கடிதத்தில் ஸ்டாலின் எழுதியுள்ளதாவது:
சாதி ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் விடுதலையும் - தண்டனைக் குறைப்புமே தீர்ப்பாக வந்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புகளைத் தனிப்பட்ட கண்ணோட்டத்துடன் பார்க்காமல், சட்டரீதியாக அணுகுவதே தி.மு.கழகத்தின் வழக்கம்.
இந்த வழக்கின் தீர்ப்பை சட்டரீதியாகப் பார்க்கும்போது, சாட்சியங்களை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு தவறிவிட்டது என்ற அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அரசுத் தரப்பில் உரிய ஆவணங்களை, ஆதாரங்களை, சாட்சிகளை முன்வைத்திருக்க வேண்டிய காவல் துறை, தன் கடமையிலிருந்து தவறியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபிறகு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சொல்லியிருக்கிறார்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை மன்னித்த விவரங்களை எடப்பாடி வழங்கவில்லை: சபாநாயகருக்கு திமுக பதில்
அது இதுபோன்ற நேர்வுகளில் சொல்லப்படும் சம்பிரதாயமான வார்த்தைகளா, சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கையா, காவல் துறை அப்போதாவது தன் கடமையைச் செய்யுமா, இளைஞர் சங்கர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருப்பது காட்சியாகப் பதிவாகியுள்ள நிலையில், அவரைக் கொன்றவர்கள் யார் என்பதைச் சட்டத்தின் முன் உரிய சாட்சியத்துடன் நிரூபித்து, இளம்பெண் கவுசல்யாவுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்திடுமா?
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.