குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. "குறி பார்த்து" அடித்த ஸ்டாலின்.. எவ்வளவு நிதி தேவை? முடியுமா?
சென்னை: திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம், "விடியலுக்கான முழக்கம்" என்ற பெயரில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் 350 ஏக்கரில் அமரும் அளவுக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Recommended Video
அப்போது 10 ஆண்டுகளுக்கான உறுதிமொழி என்ற பெயரில் தொலைநோக்குத் திட்டத்தை முன்வைத்தார் ஸ்டாலின். அதில் 7 உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.
இந்தியாவுக்கு மதச்சார்பின்மை மிகப் பெரிய அச்சுறுத்தல்- சொல்வது உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்
கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கான பட்ஜெட் தொகை மூன்று மடங்கு உயர்த்தப்படும் என்பது ஒரு முக்கியமான அறிவிப்பு என்றால் இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது மற்றொரு முக்கியமான அறிவிப்பாகும்.
அதிமுக வாக்கு வங்கி
இந்த அறிவிப்பு மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. அதிமுகவின் முக்கியமான ஓட்டுவங்கி பெண்கள்தான். எம்ஜிஆர், அதன்பிறகு ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் கிராமப்புற பெண்களிடையே பெரிய அளவுக்கு ஆதரவு இருந்தது. இதன் காரணமாகத்தான், திமுகவை விட, அதிமுக வாக்கு வங்கி எப்போதுமே 5 முதல் 9 சதவீதம் என்ற அளவுக்கு அதிகமாகவே இருக்கும்.
திமுக வாக்கு வங்கிகள்
இப்போது, அந்த வாக்கு வங்கியை இந்த வாக்குறுதி குறிவைத்து உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்த வாக்கு வங்கியை கைப்பற்றி விட்டால் ஏற்கனவே திமுக வலுவாக இருக்கக்கூடிய நகர்ப்புறங்கள் மற்றும் நடுத்தர வசதியுடைய மக்கள், அரசு ஊழியர்கள் அரசு ஆதரவும் சேர்ந்தால் திமுகவுக்கு வெற்றி எளிதாகக் கிடைக்கும் என்பதை அவர்கள் கணிப்பாக இருக்கிறது.
சாத்தியமான திட்டங்கள்
அதேநேரம், இந்தத் திட்டத்தால் மாநில அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்படும் என்ற பொருளாதார வல்லுனர்கள் பார்வையையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. ஏற்கனவே மிகப்பெரிய அளவுக்கு கடனில் தத்தளித்துக் கொண்டிருக்க கூடிய மாநிலம் தமிழகம். இப்போது இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்ற பொருளாதார அறிஞர்கள் கேள்விக்கு.. "முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதியோர் ஓய்வு ஊதியம், கைம்பெண் ஓய்வூதியம் போன்றவற்றைக் கொண்டு வந்தபோதும் இப்படித்தான் சொன்னார்கள்.. ஆனால் அதை அவர் செயல்படுத்தினார்.. இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்க முடியாது என்று கூறினர்.. அதையும் அவர் வழங்கினார்.." என்று திமுகவினர், பதிலுக்கு பழைய வரலாற்றை எடுத்துச் சொல்கிறார்கள்.
எவ்வளவு செலவாகும்?
சரி.. இந்த திட்டத்தால் அப்படி என்னதான் செலவாகும் என்கிறீர்களா? தமிழகத்தில் சுமார் 2.8 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் என்று வைத்துக் கொண்டால், ஒரு மாதத்துக்கு 2800 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும். ஆண்டுக்கு 33 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவாகும். சுகாதாரம், குடிநீர் வழங்கல், வீட்டு வசதி, நகர்ப்புற மேலாண்மை ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையை விட இது அதிகம் என்கிறார்கள் புள்ளிவிபர வல்லுனர்கள்.
அவசியமான திட்டம்
அதேநேரம், இது அவசியமான திட்டம் என்று சொல்லக்கூடிய பொருளாதார வல்லுனர்களும் இருக்கிறார்கள். பிரேசில் போன்ற நாடுகளில் ஊக்கத்தொகை வழங்கப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும், தற்போது மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லாத காலகட்டம். அரசு நேரடியாக மக்களுக்கு பணத்தை வழங்க வேண்டும், அப்போதுதான், பொருளாதார மீட்சி அடையும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு பொருளாதார வல்லுனர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, பெட்ரோல் டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களும், எரிவாயு சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருள் விலையும் அதிகரித்துள்ளது.
பணப் புழக்கம்
இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக அரசு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அது சமூகத்திற்குதான் திரும்ப வரும். பணப்புழக்கம் அதிகரித்து தமிழகம் பொருளாதார வளர்ச்சி அடையும். பல்வேறு நிறுவனங்களும் தமிழகத்தில் தொழிற்சாலைகளை துவங்க முன்வருவார்கள். இதற்கு, இந்த பணப் புழக்கம் முக்கிய காரணமாக மாறப்போகிறது என்று பாசிடிவாகவும் சொல்கிறார்கள் சில பொருளாதார அறிஞர்கள். இது சாத்தியமா, இதனால் பலன் கிடைக்குமா என்பதெல்லாம் இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிய வந்துவிடும்.