ஜி.எஸ்.டி. இழப்பீடு விவகாரத்தில் தமிழக அரசு இனியும் அமைதி காக்கக்கூடாது -மு.க.ஸ்டாலின்
சென்னை: ஜி.எஸ்.டி. இழப்பீடு விவகாரத்தில் தமிழக அரசு இனியும் அமைதி காக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாளை நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அணையப் போகின்ற தீபம் ஆட்டம் போடுவது போல், மொழிக் கொள்கையில் முதல்வர் இரட்டை வேடம்...ஸ்டாலின்!!
சி.ஏ.ஜி அமைப்பு
ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பு 5 ஆண்டுகளுக்கு ஈடுசெய்யப்படும் என்று மாநிலங்களுக்கு அளித்த "இறையாண்மை மிக்க " உத்தரவாதத்தை மத்திய பா.ஜ.க. அரசு காற்றில் பறக்கவிட்டுள்ள செயல் மிகுந்த வேதனைக்குரியது. வசூல் செய்யப்பட்ட "ஈடுசெய்தல் நிதியை" - சம்பந்தப்பட்ட "ஜி.எஸ்.டி மாநிலங்களுக்கு ஈடுசெய்யும் நிதி"யில் வரவு வைக்காமல் - இந்தியத் தொகுப்பு நிதியில் வைத்துக் கொண்டு வேறு செலவுகளுக்கு மத்திய அரசு பயன்படுத்தி விட்டது என்று சி.ஏ.ஜி. அமைப்பே பகிரங்கமாகக் குற்றம் சாட்டி விட்டது.
மாநில உரிமை
இந்தியத் தலைமை வழக்கறிஞர் கூறியிருக்கிறார் என்று ஒரு காரணத்தை மேற்கோள் காட்டி - "வருவாய் இழப்பீட்டினை" ஈடுசெய்ய முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு கைவிரித்துள்ளது. "மாநிலங்கள் வேண்டுமானால் சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம்" என்று கூறியிருப்பது, மாநிலங்களின் நிதி தன்னாட்சி உரிமையைப் பாதிக்கும்!
தைரியம் இல்லை
ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருக்கும் வாக்கெடுப்பு முறையைப் பயன்படுத்தி - ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீட்டை ஈடுசெய்ய மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக மாநிலங்களைத் திரட்டும் ஓர் அருமையான வாய்ப்பை அ.தி.மு.க. அரசு சென்ற கூட்டத்திலேயே கோட்டை விட்டுவிட்டது. மத்திய அரசின் முடிவு மாநில நிதி உரிமைகளுக்கு எதிரானது என்றும் - அதுகுறித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தியே முடிவு செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தவில்லை; அப்படி பிரதமரிடம் மாநில உரிமைக்காகக் கோரிக்கை வைக்கத் தைரியமும் தமிழக அரசுக்கு இல்லை!
வாக்கெடுப்பு தேவை
கடிதம் எழுதி விட்டால் ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீட்டை மத்திய அரசு ஈடுசெய்து விடாது என்பதைத் திரு. பழனிசாமி உணர வேண்டும். ஆகவே இனியும் அமைதி காக்காமல் - அக்டோபர் 5-ஆம் தேதி நடக்கும் 42-ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் "ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும்" "மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும்" வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆக்கபூர்வமாக வலியுறுத்தி - மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.