“என் அண்ணன் அழகிரி..” - உருகிய முதல்வர் ஸ்டாலின்.. ஆயிரம் கசப்பு இருந்தாலும் பாசம் விட்டுப் போகுமா?
சென்னை : கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதன் இல்லத் திருமணத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "என் அண்ணன் அழகிரி" எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
தனது சகோதரர் மு.க.அழகிரியுடன் கசப்பில் இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவ்வப்போது அழகிரியின் பெயரை பொது மேடைகளில் குறிப்பிட்டு வருகிறார்.
இன்றும் அதுபோல "என் அண்ணன் அழகிரியும், நானும், குடும்பத்தில் உள்ள சகோதரர்களும் சண்முகநாதன் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழர்களாக இருந்தோம்" என நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
“தம்பீ.. இதையெல்லாம் பார்க்க அப்பா இல்லையேனு அழுவாரு” - கல்யாண மேடையில் கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!
மு.க.அழகிரி
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது மகன் மு.க.அழகிரியை 2014-ஆம் ஆண்டு தி.மு.கவில் இருந்து நீக்கினார். கருணாநிதி மறைவுக்குப் பின்னர் மு.க.அழகிரி தி.மு.கவில் இணைவதற்கும், முக்கிய பொறுப்பைப் பெறுவதற்கும் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை. அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் தி.மு.கவில் ஓரங்கட்டப்பட்டாலும், தி.மு.கவில் பெரிய குழப்பங்கள் எதையும் ஏற்படுத்தாமல் அமைதியாகவே இருந்து வருகிறார் அழகிரி.
சந்திக்கவே இல்லை
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஸ்டாலினை நினைத்து பெருமைப்படுவதாக மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியின்போது அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அவரது மகன் தயாநிதி அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இருவருக்கும் இடையே இருந்த கசப்பு நீங்கிவிட்டதாக கூறப்பட்ட நிலையிலும் இருவரும் சந்தித்துப் பேசிக்கொள்ளவே இல்லை.
ஒரே இடத்தில் இருந்தும்
கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி கடந்தாண்டு இறுதியில் காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வந்தார். அதேநேரத்தில் அழகிரியும் துக்க நிகழ்வில் பங்கேற்க அங்கு வந்தார். ஒரே வீட்டில் இருவரும் இருந்தும் நேருக்கு நேராக இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
கடைசியாக இருவரும் ஒன்றாக இருந்தது கருணாநிதி மறைவின்போதுதான். கருணாநிதி மறைவின்போது அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருவரும் ஒன்றாகச் சென்றனர்.
அண்ணன் அழகிரி
மு.க.அழகிரி தனது தம்பி ஸ்டாலின் மீது கசப்புணர்வில் இருந்தாலும், தி.மு.கவுக்கு சிக்கல் ஏற்படுத்தும் விஷயங்கள் எதையும் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு செய்யவில்லை. ஸ்டாலினின் சகோதரி செல்வியே இருவருக்கும் இடையே பாலமாக இருந்து வருகிறார்.
என்னதான் பிரச்சனை இருந்தாலும் இருவரும் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் குடும்பத்திற்குள் கூட விமர்சித்து பேசிக்கொள்வதில்லையாம். ஸ்டாலினும் பொது மேடைகளில் அவ்வப்போது தனது அண்ணன் அழகிரி பெயரைக் குறிப்பிட்டு வருகிறார். அந்தவகையில் இன்றும் "என் அண்ணன் அழகிரி" எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சண்முகநாதன் இல்ல திருமணம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் மறைந்த சண்முகநாதனின் பேரன் திருமண விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "சண்முகநாதனுக்கு 1971-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையில் திருமணவிழா நடந்தது. இன்றைக்குக் கலைவாணர் அரங்கமாக இருக்கும் அன்றைய பாலர் அரங்கம் புதுப்பிக்கப்பட்டு, கலைவாணர் அரங்கமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நடந்த முதல் நிகழ்ச்சி சண்முகநாதன் திருமண நிகழ்ச்சிதான்.
நானும் அண்ணன் அழகிரியும்
அப்போது, சண்முகநாதனுக்கு நானும், நான் மட்டுமல்ல, என் அண்ணன் அழகிரி அவர்களும், அதேபோல என் குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அனைவரும் மாப்பிள்ளைத் தோழர்களாக இருந்து அந்தத் திருமண விழாவை நடத்தி வைத்தோம்.
அந்த அளவுக்கு அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தவர். அவரைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அவரை யாரும் அப்பாவின் செயலாளர் என்று அழைக்க மாட்டோம். அப்படிப் பார்த்ததும் இல்லை. எங்களுடைய குடும்பத்தில் ஒருவராகத்தான், கருணாநிதிக்கு நான் எப்படி ஒரு மகனாக இருக்கிறேனோ அதுபோல சண்முகநாதனும் ஒரு மகனாகத்தான் கடைசி வரையில் இருந்தார்" என உருக்கமாகப் பேசினார்.