அடுத்த முக்கிய புள்ளியும் காலி.. பாஜகவில் ஐக்கியம்? - அண்ணாமலை ஸ்கெட்ச்சுக்கு கிடைத்த பரிசு!
சென்னை : கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்த சரத்பாபு அக்கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார்.
சரத்பாபு இன்று மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் அவர் பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருவது கமலுக்கும், அக்கட்சியின் தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்க எதுக்கு வந்தீங்க? மதுரை மேயர் இந்திராணி காரை முற்றுகையிட்ட மக்கள்! சமரசம் பேசிய அதிகாரிகள்!
கமல்ஹாசன் கட்சி
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தை முன்னேற்ற வருகிறேன் எனக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். சமூக சேவகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர் கட்சியில் இணைந்தனர். தொடர்ந்து நடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றனர். சில தொகுதிகளில் அ.ம.முக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்தனர் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள்.
மக்கள் நீதி மய்யம்
2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெரும் நம்பிக்கையோடு அக்கட்சி வேட்பாளர்கள் களமிறங்கினர். வலுவான கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டதால் அந்தத் தேர்தலில் கட்சியில் ஒருவரும் வெற்றி பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். முக்கிய வேட்பாளர்கள் பலரும் படுதோல்வியைத் தழுவினர்.
ஒருவர் பின் ஒருவராக
தேர்தல் தோல்விக்குப் பிறக்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து வெளியேறத் தொடங்கினர். துணைத் தலைவராக இருந்த ஆர்.மகேந்திரன், சுற்றுச்சூழல் அணி செயலாளராக இருந்த பத்மபிரியா ஆகியோர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தனர். தலைமை நிலைய பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து வெளியேறினர். இந்நிலையில் தற்போது கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக இருந்த சரத்பாபு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கமலின் கொள்கைகளை பரப்பினேன்
கட்சியிலிருந்து விலகியது தொடர்பாக சரத்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீது பெரும் நம்பிக்கை கொண்டும், கமல்ஹாசன் மீதான நம்பிக்கையோடும் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சியில் இணைந்து தீவிர கட்சி பணியில் ஈடுபட்டு வந்தேன். கமலின் கொள்கைகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தேன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு 21,139 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தேன். அதன் பின்னர் எனக்கு மாநிலச் செயலர் பொறுப்பு வழங்கினார்.
கமலுக்கு ஈடுபாடே இல்லை
உள்ளாட்சித் தேர்தலிலும் சிறப்பாக பணியாற்றி கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தேன். இந்த இரு உள்ளாட்சித் தேர்தல்களில் தலைவர் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்தது. அதன் பிறகு தலைவரின் ஈடுபாடு கட்சியில் வெகுவாகக் குறைந்து, வருவாய் ஈட்டும் மனநிலைக்கு முழுவதுமாக சென்றுவிட்டார். இதனால் தமிழ்நாட்டில் இக்கட்சியால் எவ்வித மாற்றத்தையும் மக்களுக்காக கொண்டு போய் சேர்க்கமுடியாது என்ற நிலையில், இக்கட்சியில் தொடர மனமில்லாமல் விலகுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உழைப்பேன்
மேலும், பட்டினி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எனது பயணம் தொடரும். இன்னும் பல மடங்கு வீரியத்துடன் தொடர்ந்து 2024-ல் இந்திய அளவிலும் மற்றும் 2026-ல் தமிழகத்திலும் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்க மக்களுக்கான ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்பேன் என்றும் சரத்பாபு தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் பாஜகவில் இணைவார் எனக் கூறப்பட்டது.
பாஜகவில் இணைகிறார்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த சரத்பாபு அக்கட்சியில் இருந்து விலகி இன்று பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் முக்கிய பிரமுகர் பாஜகவில் இணைவது பாஜக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை திட்டம்
முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகளான டாக்டர் ஆர்.மகேந்திரன், பத்மபிரியா ஆகியோர் திமுகவில் இணைந்தனர். தற்போது சரத்பாபு பாஜகவில் இணையவுள்ளதற்கு, அண்ணாமலையின் தொடர் முயற்சிகளே காரணம் எனக் கூறப்படுகிறது. மாற்றுக் கட்சிகளில் அதிருப்தியில் இருப்பவர்களிடம் தொடர்ந்து பேசி, முக்கியமான பொறுப்பு தருவதாக நம்பிக்கை அளித்து அவர் பாஜகவிற்கு இழுத்து வருகிறார். அந்தவகையிலேயே சரத் பாபுவும் பாஜகவில் இணைகிறார்.
எதிர்காலம் என்ன ஆகும்
தொடர் தோல்விகளால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பலரும் விலகி வரும் நிலையில் மற்ற முக்கிய நிர்வாகிகள் பலரும், நாமும் விலகிவிடலாமா, இங்கேயே இருந்தால் எதிர்காலம் இருக்குமா என குழம்பிப்போய் உள்ளனர். நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வந்தாலும், கட்சியை பலப்படுத்த கமல்ஹாசனும் சீரிய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் இருந்து வருகிறார். இதனால் மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் குறித்து தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
நிதி திரட்டல் முயற்சியும் தோல்வி
அரசியல் கட்சிகள் பலவும், தொழிலதிபர்கள், பெரும் நிறுவனங்களிடம் நிதி பெற்று வருகின்றன. ஆனால், கமல்ஹாசன் தன் கட்சி தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதற்காக பெரும் நிறுவனங்களிடம் நிதி பெறக்கூடாது என்ற முடிவில் இருக்கிறார். மக்களிடம் வெளிப்படையாக நிதி பெற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. குறைவான தொகையே வசூல் ஆகியிருப்பதால் கட்சியின் நிதி நிலைமை பரிதாபகரமான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்சி வலுப்பெறுமா
2024 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து மற்ற கட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில், சினிமாவில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். கிராமங்களிலும் கட்சி கட்டமைப்பை பலப்படுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வைத்துள்ளார் கமல்ஹாசன் என்கிறார்கள் மக்கள் நீதி மய்யத்தினர்.