ஓட்டு போட சொன்னேன் போட்டீங்களா? கடுப்பான ’நாட்டாமை’! மூச்சு முட்ட ரம்மிக்கு முட்டு கொடுக்கும் சரத்!
சென்னை : ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரத்தில் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.. நான் நடித்தால் மட்டும் தவறா என நடிகர் சரத்குமார் ஆவேசமாக பேசி இருக்கும் நிலையில் அவர்களெல்லாம் விளையாட்டு வீரர்கள் பணத்துக்காக நடிக்கிறார்கள் ஆனால் நீங்கள் அரசியல் கட்சித் தலைவர் மக்கள் நலன் மீது உங்களுக்கு பொறுப்புணர்வு வேண்டும் என நடிகர் சரத்குமாரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஆன்லைன் ரம்மியை ஒழிக்க தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு தற்போது அந்த குழுவும் தமிழக அரசிடம் அறிக்கை அளித்த நிலையில், சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ஓட்டு போடச்சொன்னபோது போடல.. ரம்மி பற்றி கூறினால் மட்டும் விளையாடுவாங்களா? கடுப்பான சரத்குமார்
ஆன்லைன் ரம்மி
ஆனால் இதுதொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் அது காலாவதி ஆகிவிட்டது. அதே நேரத்தில் அதிமுக, பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தற்போது வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லாத நிலையில் தொடர்ந்து தற்கொலைகள் நடைபெற்று வருகிறது.
ரம்மியால் தற்கொலை
கடந்த சில நாட்களுக்கு முன்தினம் கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 15 லட்சம் பணத்தை இழந்ததற்காக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டும் என பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான் முதல் தமிழகத்தில் தமன்னா, மனோபாலா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் ஆன்லைனில் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.
நடிகர் - நடிகைகள்
இதே போல சில நடிகைகள் விளையாட்டு வீரர்களான மகேந்திர சிங், தோனி விராட் கோலி ரோஹித் சர்மா உள்ளிட்டோரும் இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மீதெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்படாமல் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதற்கும் ஒரு காரணம் உண்டு நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருபவர்கள் அதனால் அவர்கள் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதில் கருத்து முரண்பாடு இருக்கும் என்றாலும் அவர்களை குற்றம் சாட்ட முடியாது.
நாட்டாமை சரத்குமார்
ஆனால் மக்கள் நலனுக்காக அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதோடு ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கும் சரத்குமாருக்கு மக்கள் நலன் மீது பொறுப்புணர்வு அதிகம் உண்டு அதனால் அவர் மீது விமர்சனக் கணைகள் தொடுக்கப்படுவது வழக்கம்தான். இனிமேல் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களை நடிக்க மாட்டேன் என கூறாமல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு ஆதரவாகவே சரத்குமார் பேசுவது போல தெரிகிறது என்கின்றனர் நெட்டிசன்கள். குறிப்பாக விராட் கோலி தோனி ஆகியோரை பற்றி பேசி வரும் சரத்குமார் அவர்கள் தேர்தலில் நிற்கவில்லை நீங்கள் ஏன் தேர்தலில் நிற்கிறீர்கள் என கேட்கிறார்கள்.
கடும் விமர்சனம்
அதற்கும் இன்று பதிலளித்திருக்கிறார் சரத்குமார் தேர்தலில் எனக்கு ஓட்டு போடச் சொன்னேன் யாராவது போட்டீர்களா ஆனால் என்னால் தான் ஆன்லைன்ல ரம்மியை விளையாடுவது போல பேசுகிறீர்கள் என கொந்தளித்து இருக்கிறார் நாட்டாமை. தற்போது மட்டுமல்ல கடந்த சில நாட்களுக்கு முன்பும் இது தொடர்பாக பேசிய அவர் என்னை மட்டுமே ஏன் குறி வைக்கிறீர்கள் என ஆவேசமாக பேசி இருந்தார் அப்போதும் சரி இப்போதும் சரி அரசியல் கட்சி நிறுவனத் தலைவராகவும் முன்னாள் எம்எல்ஏவாகவும் இருக்கும் சரத்குமாரை மக்கள் கேட்கத் தான் செய்வார்கள் அவ்வாறு இல்லை என்றால் அரசியலை விட்டு விலகி விட்டு அதன் பின்னர் நீங்கள் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் மட்டுமல்ல கள்ளச்சாராய விளம்பரங்களில் கூட நடிக்கலாம் யாரும் கேட்க மாட்டார்கள் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.