வெளிநாட்டில் ஜிஎஸ்டியால் விலைவாசி குறைந்துள்ளது.. ஆனால் இந்தியாவில் அப்படியல்ல.. சீமான் குற்றச்சாட்டு
சென்னை: இந்தியாவில் தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருவதற்கு பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
Recommended Video
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் எல்இடி விளக்குகள், கத்தி, மாவு அரைக்கும் கிரைண்டர், பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் இறைச்சி, மீன், தயிர், பன்னீர், உலர் பருப்பு வகை காய்கறிகள், கோதுமை, பட்டாணி மாவு, வெல்லம் போன்ற பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சீமான் அறிக்கை
இந்த நிலையில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை கடுமையாக மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை மக்கள் வாழவே முடியாத அளவிற்குச் வரியை உயர்த்தும் பாஜக அரசின் செயல் கண்டனத்திற்குரியது. கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட கடுமையான விலை உயர்வால் தொழில்துறையினர், வணிகர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அதிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி வரியை அதிகளவில் உயர்த்துவதை மத்திய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

விலைவாசி உயர்வு
மத்திய அரசின் இத்தகைய ஜிஎஸ்டி வரி விதிப்பானது மாநில அரசுகளின் வரி வருவாயை பறித்து அவற்றின் கடன்சுமை அதிகமாகக் காரணமானதோடு, மக்களின் தலையில் கட்டுங்கடங்காத வகையில் விலை உயர்வு சுமையை ஏற்றி வாட்டி வதைக்கும் செயலையும் பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

மக்கள் பாதிப்பு
தற்போது மீண்டும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கத்தி, பிளேடு, மின்விளக்குகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மேலும், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மீதான வரி உயர்வால் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

பாஜக மீது விமர்சனம்
மற்ற நாடுகளிலெல்லாம் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி குறைந்துள்ளது. ஆனால் உலகளவில் அதிக ஜிஎஸ்டி விதிக்கும் நாடாக இந்தியா இருந்தும், தொடர்ந்து விலைவாசி உயர்ந்துவருவது வரிவசூல் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைத்து முறைப்படுத்த தவறிய பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம். எனவே மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications