திடீர் ட்விஸ்ட்.. அல்வாபோல் சிக்கிய ‘மேட்டர்’ - எரிச்சலில் எடப்பாடி! பாயும் பன்னீர்
சென்னை: 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் முனைப்பு காட்டி வருகிறது.
சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் கடந்த சில நாட்கள் முன் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது.
அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததால் ஓ.பி.எஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். அடுத்தடுத்த நாட்களில் இரு தரப்பினரும் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.
இப்போ சந்தோஷமா? டிடிஎஃப் வாசனை போட்டுக் கொடுத்த பூவை! நோட் பண்ணிய சென்னை போலீஸ்! அடுத்து என்ன கைதா?
உயர்நீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது. கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.
அடுத்த வழக்கு
இதன் தொடர்ச்சியாக இருதரப்பினரும் போஸ்டர்கள், பேட்டிகளில் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த சண்முகம் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 23 ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முந்தைய பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அடுத்த பொதுக்குழுவுக்கு தடை வேண்டுமெனில், தனி நீதிபதியை அணுகுமாறும் அறிவுறுத்தி வழக்கௌ 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கோடநாடு விவகாரம்
இதற்கிடையே, கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. அந்த வழக்கை விசாரித்து வந்த எஸ்.ஐ. முஹம்மது ரபீக் உயிரிழந்த நிலையில், கொலையாளிகளுடன் பேரம் பேசியவர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவரும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் என நமது அம்மா முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதைதான் அடுத்த அஸ்திரமாக ஓபிஎஸ் தரப்பு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா அபிமானிகள்
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை அதிமுகவிலிருந்து அவராலும், அவரது ஆதரவாளர்களாலும் ஓரம்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகளையும், ஜெயலலிதா அபிமானிகளையும் சந்தித்து கொடநாடு கொலை விவகாரம் குறித்து விளக்கி எடப்பாடிக்கு எதிர்ப்பு அலையை உருவாக்கிட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாம். கை கொடுக்கிறதா என்று சீக்கிரம் பார்ப்போம்.