ஒரே விசிட்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி.. 200 வருட ஏக்கம் தீர்ந்தது.. 5212 பழங்குடி மக்களுக்கு பட்டா
சென்னை: திருச்சியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டரில் தூரத்தில் உள்ள கிராமம் பச்சைமலை. இந்தப் பகுதி அதிகமான மலைவாழ் மக்கள் வாழும் பகுதி. இங்குள்ள வடநாட்டில் மட்டும் 21 கிராமங்கள் உள்ளன. பக்கத்தில் உள்ள கோம்பையைச் சேர்த்தால் 32 கிராமங்கள். அதைத்தாண்டி தென்புற நாடு உள்ளது. ஆக, சுற்றுவட்டாரம் முழுக்க செழுமையான கிராமங்கள் நிறைந்துள்ளன.
ஆனால் இந்த அழகிய கிராமத்தில் வசித்த அத்தனை மக்களும் சில மாதங்கள் வரை மகிழ்ச்சியாக இல்லை. தலைமுறை தலைமுறையாக இங்கே வசித்து வரும் அவர்கள் பட்டா கிடைக்காமல் போராடி வந்தனர். அவர்களின் அழுகுரலை ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் மகிழ்ச்சி குரலாக மாற்றித் தந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அப்படி என்ன செய்தார் என்கிறீர்களா? 200 ஆண்டுக்கால பட்டா கனவை நிறைவேற்றித் தந்துள்ளார்.
சமூகநீதி வரலாற்றில் திமுக நிகழ்த்தியுள்ள சாதனை.. எஸ்.டி பட்டியலில் நரிக்குறவர்.. ஸ்டாலின் வரவேற்பு!
கிராமவாசிகள் பேட்டி
இது குறித்து இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா, "நாங்க ஆண்டாண்டு காலமா இந்தப் பச்சைமலையில தான் வசித்துவருகிறோம். கேழ்வரகு, சோளம், கம்பு, திணை, வரகு இவற்றைத்தான் சாப்பிட்டு விவசாயம் செய்து வந்தோம். இப்ப கொஞ்சம் மரவள்ளிக்கிழங்கு, முந்திரி எல்லாம் விவசாயம் செய்கிறோம்.
எங்களுக்கு வெளியுலகமே தெரியாமல்தான் வாழ்ந்து வந்தோம். ஆனா இப்ப அப்படி கிடையாது. நிலைமை மாறிப்போச்சு. எல்லா மக்களும் இப்ப பிள்ளைகளைப் படிக்க வைக்கிறோம். ஊர்ல உள்ள எல்லா பிள்ளைகளும் படிக்கிறார்கள். படிப்புதான் முக்கியம் என்று எங்க தலைமுறை உணர ஆரம்பிச்சாச்சு.
கிராமத்திற்கே வெளிச்சம்
படிக்கப் போகுற இடத்துல சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள். ஒரு கோரிக்கை சம்பந்தமா மனு போட்டா ரேஷன் கார்டு இருக்கா என்று கேட்கிறார்கள். ஏதாவது திட்டத்திற்கு உதவி கேட்டுப் போனா ஆதார் அட்டை இருக்கானு கேட்கிறார்கள். இப்படி எதுவுமே கிடைக்காமல் இந்த ஆண்டு வாழ்ந்து வந்தோம். இப்ப ஒரு வருஷத்தில்தான் இந்தப் பச்சைமலை கிராமமே வெளியே தெரிகிறது.
ஒரே விசிட்டில் மாறியது
ஒரே வருஷத்துல இத்தனை வசதியையும் செஞ்சு கொடுத்திருக்காரு முதல்வர் ஸ்டாலின். எங்க கனவு இப்போதுதான் நிறைவேறி இருக்கு" என்கிறார் இந்தக் கிராமத்துப் பெண். "எங்க பச்சைமலைக்கு முதல்வராக ஆவதற்கு முன்னால் ஸ்டாலின் ஒருமுறை வந்தார். அப்ப நான் முதல்வராக வந்தால் இந்தப் பச்சமலைக்கு பல திட்டங்களைக் கொண்டு வருவேன் என்று சொன்னார். அதன்படி அவர் ஆட்சிக்கு வந்ததும் பல ஆண்டுக்காலமா கிடக்காமலிருந்த பட்டா, சாதிச் சான்றிதழை எல்லாம் உடனே கொடுத்து உதவி இருக்கிறார். ஒரு இடைஞ்சலும் இல்லாமல் மிக எளிமையா இந்த பட்டா சான்று எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. நாங்க இதற்கு முன்னாடி எத்தனையோ அதிகாரிகளிடம் முறையிட்டு இருக்கிறோம். அப்ப எல்லாம் நடக்காத காரியம். இப்ப தானா எந்தச் செலவுமே இல்லாமல் நிறைவேறி இருக்கிறது. முதல்வருக்கும் நாங்க நன்றி சொல்கிறோம்" என்கிறார் இன்னொரு கிராமவாசி ராஜேந்திரன்.
நிலம் சொந்தமான மகிழ்ச்சி
ஆறு கிராமத்திற்கு ஒரு அதிகாரி எனப் போட்டு மொத்தம் 5 நாள்கள் முகம் நடத்தில் இந்தப் பட்டாக்கள் முறையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. பட்டாவுடன் இந்த கிராம மக்களுக்கு ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டையும் முறையை இப்போது கிடைத்துள்ளது. இதன் மூலம் கடந்த 200 ஆண்டுகளாகப் பட்டா கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்ட பூர்வக்குடி மக்களின் நில உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. வடநாட்டுக்கு மட்டுமே 225 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
"இந்த நிலத்தில்தான் 200 வருஷமா காலங்காலமா வாழ்ந்து வந்தோம். ஆனா இந்த நிலம் நமக்குச் சொந்தமாகுமா? இல்லையா ? எனக் கவலையிலிருந்தோம். இப்ப அந்தக் கவலை இல்லை. பட்டா கிடைச்சாச்சு. எங்களுக்குப் பின்னாடி எங்க வாரிசுகள் இதே நிலத்தை ஆள முடியும். அதற்கு உதவிய ஸ்டாலின் அய்யாவுக்கு நன்றி" என்கிறார் கிராமவாசி மஞ்சுளா. "எங்க வட்டத்தில் மட்டும் 67 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் பச்சைமலை ரொம்ப ஸ்பெஷல். வடநாடு, கோம்பை, தென்புறநாடு ஆகிய மூன்றும் சேர்ந்தது பச்சைமலை. மொத்தமா சேர்த்தா 59 குக்கிராமங்கள் உள்ளன.
பரிசாக வந்த பட்டாக்கள்
வர்களின் 200 ஆண்டுக்கால கோரிக்கையா இந்த பட்டா பிரச்சினை இருந்தது. இவர்களுக்காக முதல்வர் ஸ்டாலினின் உத்தரவில் தனி முகாம்கள் நடத்தி பட்டா வழங்கி இருக்கிறோம். மேலும் ஏழே நாளில் சாதிச் சான்றிதழை வங்கி வருகிறோம். அதில் தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்" என்கிறார் துறையூர் வட்டாட்சியர் புஷ்ப ராணி. திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், "திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் பழங்குடி இன மக்களுக்கும் நரிக்குறவர் மக்களுக்கும் பட்டா வழங்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம். அதனடிப்படையில் இதுவரை சுமார் 1183க்கும் அதிகமான மக்களுக்குப் பட்டா வழங்கி இருக்கிறோம். பூர்வ குடிகளாக இருக்கும் இவர்களின் கனவை இந்த ஒரு வருடத்தில் நிறைவேற்றித் தந்துள்ளோம். இவர்களோ நரிக்குறவர் மக்கள் 135 நபர்களைத் தேர்வு செய்து பட்டா வழங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பழங்குடி மற்றும் நரிக்குறவ மக்களுக்கு மட்டும் கடந்த ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 5212 பட்டாக்கள் வழங்கியுள்ளோம்" என்கிறார். நிலம் இருந்து உரிமை கொண்டாட முடியாமல் தவித்த மக்களுக்கு வாழ்நாள் பரிசாக வந்துசேர்ந்திருக்கிறது இந்தப் பட்டாக்கள்.
மரியாதை கிடைக்கிறது
திருச்சி பக்கம் உள்ள துறையூரில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் பல ஆண்டுகளாகப் பட்டா கேட்டுப் போராடி வந்தனர். மேலும் தங்க இடம் இல்லாமலும் பலர் திண்டாடி வந்தனர். நிலையான ஒரு வசிப்பிடம் இல்லாததால் கல்வி பெறுவதில் இருவர்களுக்குப் பல சிரமங்கள் இருந்தன. இந்தக் குறையை ஒரே ஆண்டில் நிறைவேற்றித் தந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இப்போது இவர்களுக்குப் பட்டாவுடன் மூன்று செண்ட் நிலமும் கிடைத்துள்ளது.
இது குறித்துப் பேசிய ஒரு நரிக்குறவர், "நாங்கள் திருச்சி மாவட்டத்து நரிக்குறவ காலனியில் இருக்கிறோம். எங்களை யாரும் ஏத்துக்க மாட்டார்கள். எங்கேயும் நிலையா தங்க விடமாட்டார்கள். எல்லோரும் போய் பஸ் ஸ்டாண்டில் தான் படுப்போம். ரொம்ப கஷ்டமா இருந்தது. இப்படி பேருந்து நிலையத்தில் பத்து வருஷத்துக்கு மேலா இருந்தோம் சாமீ. யார் வந்து அடிச்சாலும் விரட்டினாலும் அங்கேயே சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்தோம். இப்ப பட்டா வந்ததால் எங்களுக்குக் கொஞ்சம் மரியாதை கிடைத்திருக்கிறது. இன்னும் போகப்போக மரியாதை அதிகமா கிடைத்தால் சந்தோஷம்தான்" என்கிறார்.
காவலராக முதல்வர்
"எல்லா சாதியிலும் படிச்சுட்டு எல்லோரும் பெரிய பெரிய வேலையில இருக்கிறார்கள். ஆனால் எங்க சாதியில் அப்படி இல்லை. எல்லோரும் இந்த மணிதான் பின்னுகிறார்கள். வேறு வேலை தெரியாது. படிப்பறிவு கிடையாது. எங்களை யாருமே கண்டுக்கவே இல்லை. இப்போதுதான் 3 செண்ட் நிலம் கொடுத்து இருக்கிறார்கள். கூடவே பட்டா கிடைத்திருக்கிறது. இலவசப் பட்டா என்பது கொடுத்துப் பல காலம் ஆயிற்று. இப்ப முதலமைச்சர் ஸ்டாலின் அய்யா வந்த அப்புறம் தான் இந்தப் பட்டா எங்களுக்குக் கிடைத்திருக்கிறது" என்கிறார் ஒரு நரிக்குறவ பெண்மணி. துறையூர் ரவுண்டான பகுதியை அடுத்து மருங்காபுரி என்ற பகுதியில்தான் இந்த நரிக்குறவர் காலனி எனத் தனியாக உள்ளது. இங்குள்ள 155 பேருக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "முன்பே பட்டாக்கள் வழங்கி இருக்கிறோம். இப்போது 500 பட்டாக்கள் வழங்கி இருக்கிறோம். நரிக்குறவ மக்களின் காவலராக இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார். அவர்களின் குறைகளை உடனடியாக கேட்டு நிறைவேற்ற உத்தரவு போட்டுள்ளார். அந்த வகையில் வேலைகள் போர்க்கால அடிப்படையில் வேகம் பெற்றுள்ளன" என்கிறார்.