தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மொத்தமாக நிறுத்தம் - ஏன் என்னாச்சு?
சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைத்து வருவதால் அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்து யூனிட்களிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைத்து வருவதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்து யூனிட்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்டுகள் உள்ளன. ஒரு அலகில் 210 மெகாவாட் என 5 அலகுகளில் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
கடந்த சில மாதங்களாக நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில அலகுகள் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக நான்கு அலகுகள் நிறுத்தப்பட்டு மூன்றாவது அலகில் மட்டுமே நாளொன்றுக்கு 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் 7நாட்களில் 7350 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு பதில் 1470 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.
தற்போது சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைத்து வருவதால் அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்து யூனிட்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று 2-வது நாளாக மின் உற்பத்தி ஐந்து யூனிட்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அனல் மின் நிலையத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு கையிருப்பில் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் நீடிப்பதால் பகல் நேரத்தைவிடவும் இரவு நேரங்களில் அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது. மின் பராமரிப்பு என்ற பெயரிலும் மின்வெட்டு அரங்கேறுகிறது. இதனால் சிறு, குறு தொழிற்சாலைகளை நடத்துகிறவர்கள், பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக, சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
அனல்மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, "தமிழ்நாட்டின் நிலக்கரி தேவை என்பது நாளொன்றுக்கு 72,000 டன் என்ற நிலையில் 48,000 முதல் 50,000 டன் மத்திய அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 18 அன்று 30,317 டன் நிலக்கரியும் ஏப்ரல் 19 ஆம் தேதி 37,285 டன் எனக் குறைவான அளவு நிலக்கரிகளையே வழங்கும் சூழல் உள்ளது. தற்போது ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான நிலக்கரியை இறக்குமதி செய்யுமாறு முதலமைச்சர் கூறியிருந்தார். அதன்படி, 4 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இதில் நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. ஒரு டன் நிலக்கரி 137 டாலர் என்ற அளவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இப்போது அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பில் இருந்தும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் காற்றாலை மின்சார உற்பத்தியும் சூரிய சக்தி மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 17,000 மெகாவாட் தேவை என்ற நிலையில் சீசன் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுக்கிறது. மே மாதம் முதல் அக்டோபர் வரை காற்று சீசன். இந்த காலகட்டத்தில் அதிக அளவில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யபடுகிறது.
தமிழகத்தில் 13000 க்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1௦௦௦௦க்கும் அதிகமான காற்றலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே 1 ஆம் தேதி 2097 மெகாவாட்டை எட்டியது. இந்த நிலையில் தற்போது காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒட்டு மொத்தமாக காற்றாலை மின் உற்பத்தி 3050 மெகாவாட்டை எட்டியுள்ளது. தென்மேற்குப் பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால் மின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.