தலைநகர் சென்னையில்.. திடீரென வேகமெடுக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு.. என்ன காரணம்.. அறிகுறிகள் என்னென்ன
சென்னை: தலைநகர் சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் இப்போது பருவ மழை தொடங்குகிறது. மாநிலத்தில் பரவலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனிடையே காலநிலை மாற்றம் காரணமாகத் தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவி வருகிறது.

மெட்ரால் ஐ
சில நாட்களில் மட்டும் மெட்ரால் ஐ காரணமாக மருத்துவமனைக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி குறைந்தது 50 பேர் வரை மெட்ராஸ் ஐ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். மெட்ராஸ் ஐ எளிதாகக் குணப்படுத்தக் கூடி நோய் தான் என்றாலும் கூட உரிய நேரத்தில் சிகிச்சை தேவை என்பதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றம்
இப்போது பருவ மழைக் காலம் தொடங்கி உள்ள நிலையில், இந்த காலநிலை மாற்றம் காரணமாகவே தலைநகர் சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவி வருகிறது. கண் விழி மற்றும் இமையை இணைக்கும் ஜவ்வு படலத்தில் வைரஸ் தொற்று ஏற்படும்போதே இந்த மெட்ராஸ் ஐ ஏற்படுகிறது. இது காற்றின் மூலம் மிக வேகமாகப் பரவும் திறன் கொண்டது. எனவே, ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அது விரைவாக மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளது.

அறிகுறி
கண் சிவந்து போதல் கண்ணில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருப்பது ஆகியவை இதன் முக்கிய அறிகுறியாகும். கண் எரிச்சல் மற்றும் இமை பகுதி ஒட்டிக் கொள்தல் ஆகியவையும் மெட்ராஸ் ஐயின் முக்கிய அறிகுறியாக இருக்கிறது. மேலும், வெளியே செல்லும்போது கண் கூச்சமாகவும் இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படும் போது, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

எளிதாக பரவும்
இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பு மிக எளிதாகப் பரவக் கூடும். மெட்ராஸ் ஐ-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால், இது எளிதாக மற்றவர்களுக்குப் பரவக் கூடும். இது குடும்பத்தில் ஒருவருக்கு வந்துவிட்டால், மிக எளிதாக மற்றவர்களுக்குப் பரவிடும். எனவே, மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கவனம் தேவை
குறிப்பாக ஏசி அறையில் இருந்தால், அந்த பாதிப்பு மிக வேகமாகப் பரவக் கூடும். பெரும்பாலும், இந்த பாதிப்பு மருத்துவச் சிகிச்சை உடன் எளிதாகவே குணமடைந்துவிடும். மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் 4 நாட்கள் வரை தனி அறையில் இருக்க வேண்டும். தனி பொருட்களையே பயன்படுத்த வேண்டும். உரியச் சிகிச்சை எடுத்துக் கொண்டால் மெட்ராஸ் ஐ பாதிப்பு விரைவாகவே சரியாகிவிடும். ஆனால், உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் பார்வையில் தெளிவற்ற நிலையும் கூட ஏற்படும்.












Click it and Unblock the Notifications