ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசி நீங்க-ராஜீவை கொன்ற தணுவை கொண்டாடினோமா? காங். ஜோதிமணிக்கு திவிக எதிர்ப்பு
சென்னை: ராஜீவ் கொலையாளிகளைக் கொண்டாடுவது மாபெரும் தவறு.மன்னிக்க முடியாத குற்றம் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து திராவிடர் கழகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 தமிழரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் இருந்து விடுதலையான நளினிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, நளினிக்கு கேக் ஊட்டி வரவேற்றார்.
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை..திமுக கூட்டணியில் களேபரம்- காங். ஜோதிமணிக்கு விசிக வன்னி அரசு பதிலடி!
ஜோதிமணி ஃபேஸ்புக் பதிவு
இதனை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாக எதிர்த்திருந்தார். இது தொடர்பாக ஜோதிமணி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்ததாவது: ராஜீவ் காந்தி கொலையாளிகள் உச்சநீதிமன்றத்தால் நீண்டகாலம் தண்டனை அனுபவித்ததன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த கொடிய குற்றத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அந்த மனிதவெடிகுண்டு ராஜீவ் காந்தியை மட்டுமல்ல பல தமிழர்களையும் பலிகொண்டு விட்டது.குண்டுவெடிப்பில் தங்கள் உயிருக்குயிரானவர்களை பலிகொடுத்த குடும்பங்கள் இன்னும் ஆறாத காயத்தோடு இதே தமிழ்மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
கொலையாளிகளை கொண்டாடுவதா?
ஊடகங்களும்,சில தனிநபர்களும் கொலையாளிகளைக் கொண்டாடுவது மாபெரும் தவறு.மன்னிக்க முடியாத குற்றம். காந்தியைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடுகிற ஆர் எஸ் எஸ் பாஜகவிற்கும் , இன்று ராஜீவ் காந்தி கொலையாளிகளைக் கொண்டாடுபவர்களுக்கும் என்ன வேறுபாடு? கருணை அடிப்படையில் குற்றவாளிகள் மன்னிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் குற்றவாளிகளைக் கொண்டாடுவது அநாகரிகமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. இவ்வாறு ஜோதிமணி கூறியிருந்தார்.
விசிக வன்னி அரசு பதிலடி
இதற்கு விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தந்த பதிலில், காந்தியை கொன்ற கோட்சேவும் அவனது கும்பலும் கொலை செய்ததை ஞாயப்படுத்தியும் பெருமை பொங்கவும் அரசியல் செய்கிறது.ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் கைதான யாராவது அப்படி சொல்லி இருக்கிறார்களா?நாங்கள் 'அப்பாவிகள்''அப்பாவிகள்' எனும் அந்த குரல் கேட்ட பிறகும் இப்படி பொதுமைப்படுத்துவது ஞாயமா தோழர்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
ஜோதிமணிக்கு திவிக பதில்
இதனைத் தொடர்ந்து தற்போது கொளத்தூர் மணியை தலைவராக கொண்ட திராவிடர் விடுதலை கழகமும் ஜோதிமணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திவிகவின் மூத்த நிர்வாகி Parimala Rajan தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உங்கள் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதைக்கும் எமக்கு உண்டு. ஒரு பெண்ணாக அரசியல் களத்தில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.அது எவ்வளவு கடினமானது என்பதை அனைவரும் அறிவோம். தொடர்ந்து பாசிச பாஜகவுக்கு எதிராக களமாடி வருகிறீர்கள் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.நிற்க. அதேசமயம் சில முரண்பட்ட தகவல்களை நீங்கள் தெரிவிக்கும் பொழுது அதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்கு உண்டு.
தணுவையா கொன்றோம்?
ஏழு தமிழர் விடுதலை குறித்து தாங்கள் கூறியுள்ள கருத்துக்கள் எவ்வகையிலும் நேர்மையும் நியாயமும் அற்றது. காந்தியை கொன்ற கோட்சேவை ஆர்எஸ்எஸ் கொண்டாடுகிறது என்றால் இங்கு யாரும் ராஜீவ் காந்தியை கொன்ற தனுவை கொண்டாடவில்லை அப்படி கொண்டாடுபவர்களை பார்த்து நீங்கள் இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்வது தான் நேர்மை.ஒப்பீடே முதலில் தவறு. விடுவிக்கப்பட்டுள்ள அனைவரும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தானே ஒழிய கொலைக் குற்றவாளிகள் அல்ல. ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் நடந்த குழப்பங்கள் குறித்து அதில் பங்கேற்ற காவல்துறை அதிகாரிகள், புலனாய்வுத் துறை அதிகாரிகள் அனைவரும் ஒப்புதல் வாக்குமூலங்கள் கொடுத்துள்ளார்கள்.இவர்கள் மீதான குற்றங்கள் எந்த வகையிலும் நிரூபிக்கப்படவே இல்லை.ஆகவே இவர்கள் குற்றவாளிகள் இல்லை. முக்கியமாக இவர்களை கருணை அடிப்படையில் எல்லாம் விடுதலை செய்யவில்லை. இவர்களுக்கான மறுக்கப்பட்ட நீதிதான் இப்பொழுது வழங்கப்பட்டு இருக்கிறது. பேரறிவாளன் அவர்களின் வாதங்களையும் இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட் பல முறை கூறியுள்ள கருத்துக்களையும் தயவு செய்து படித்துப் பாருங்கள் அக்கா.
ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசி
7 தமிழர் விடுதலை குறித்து ராஜீவ் காந்தி அவர்களின் துணைவியார் சோனியா காந்தி,அவர் மகள் பிரியங்கா காந்தி,அவர் மகன் ராகுல் காந்தி ஆகியோர் இவர்கள் விடுதலைக்கு முன்பே விடுதலை குறித்து கூறியுள்ள கருத்துக்களை தாங்கள் அறிவீர்கள். இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் "ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசி"யாய் நீங்கள் நடக்க முயல்வதில் தங்களுக்கு என்ன பலன் ? மறுக்கப்பட்ட நீதி வழங்கப்பட்ட மிக மிக காலதாமதாய் வழங்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், உணர்வுள்ள ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் தாங்கள் பேசுவதை இனிமேலும் தொடர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு Parimala Rajan பதிவிட்டுள்ளார்.