முடிந்தது ஆர்டிஓ விசாரணை.. சித்ரா மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழுமா?.. பரபரக்கும் 250 பக்க அறிக்கை!
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்து ஆர்டிஓ அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 250 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில்தான் சித்ராவின் மரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழும் நிலை உள்ளது.
நடிகை சித்ரா, கடந்த 9-ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது பிரேத பரிசோதனை அறிக்கையும் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவே கூறியது.
இந்த நிலையில் சித்ராவுக்கும் தொழிலதிபர் என கூறிக் கொள்ளும் ஹேமந்திற்கும் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அடுத்தடுத்த விசாரணைகளால் சூடு பிடிக்கும் சித்ரா தற்கொலை விவகாரம்.. விரைவில் உண்மைகள் புலப்படுமா?
ஹேமந்தின் பெற்றோர்
சித்ராவின் பெற்றோர், ஹேமந்தின் பெற்றோர், ஹேமந்த், சித்ராவின் நெருங்கிய தோழிகள், சித்ராவுடன் நடித்த நடிகைகள், இறப்பதற்கு முன்னர் நடத்தப்பட்ட தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகள் என பெருமபாலானவர்களிடம் விசாரணையை ஆர்டிஓ திவ்யஸ்ரீ மேற்கொண்டார்.
வரதட்சிணை கொடுமை
இந்த நிலையில் சித்ராவின் உதவியாளர் ஆனந்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் விசாரணை முடிவடைந்து ஆர்டிஓ 250 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை நாளை பூந்தமல்லி போலீஸாரிடம் அவர் தாக்கல் செய்கிறார். சித்ரா வரதட்சிணை கொடுமையால் இறந்தாரா? என்றால் அவர் அதற்காக இறக்கவில்லை என தெரிகிறது.
வாக்குமூலங்கள்
சித்ரா வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என ஆர்டிஓ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சித்ராவின் மரணம் குறித்து 15 பேரின் வாக்குமூலங்கள் எழுத்துப்பூர்வமாக வாங்கப்பட்டது. சித்ராவின் உறவினர்களிடமே அதிக அளவில் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
சித்ராவின் மரணம்
அந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் குறித்து போலீஸார் நாளை அறிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சித்ராவின் மரணம் குறித்து பல்வேறு வதந்திகளுக்கு இந்த ஆர்டிஓ அறிக்கை முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.