மோடி ஒன்னு சொல்றார்.. மத்திய அரசு வேறொன்று சொல்கிறது.. அலங்கார ஊர்தி விஷயத்தில் "அம்பலமான அரசியல்!"
வஉசி, வேலுநாச்சியார் வாகனங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது
சென்னை: வஉசியும், வேலுநாச்சியாரும் யாரென்று தெரியாது என்று கூறி, குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்க அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது... இது பெருத்த அதிர்ச்சியை கிளப்பி விட்டு வருகிறது.
இந்த தமிழ்நாடு எத்தனையோ சாதனை மங்கைகளை பார்த்திருக்கிறது.. எத்தனையோ பெண்களின் தடம் பதித்த வரலாற்றை கரைத்து குடித்திருக்கிறது.. ஆனாலும், வீர மங்கை என்றால் அவர் வேலு நாச்சியார் மட்டுமே..!
ஷாக்! இந்தியாவில் ஒரே வாரத்தில் 40% அதிகரித்த கொரோனா.. அதுவும் இந்த 3 மாநிலங்கள்தான் டாப்!
அது சாதாரண வீரம் கிடையாது, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்... தன்னையே வரித்து கொண்ட வீரம்.. நெஞ்சுரம் மிக்க தீரம்..!
பெண் பேரரசி
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் பேரரசி என்ற பெருமை கொண்டவர் வேலுநாச்சியார்.. ஆங்கிலேய படைகளை வீழ்த்தியவர் என்ற பெயரை தட்டி சென்றவர் வேலுநாச்சியார்.. ராமநாதபுரம் மன்னரின் ஒரே மகளாக பிறந்த வேலுநாச்சியாரின் திறமைகள் கட்டுக்கடங்காதவை.. குதிரையேற்றம், வாள் வீச்சு, களரி உள்ளிட்ட போர்க்கலைகளை கற்றவர்.. கணவர் முத்து வடுகநாதரரை ஆங்கிலேயர் கொன்றுவிட்டதால், அதே ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர சூளுரைத்தவர்.
வீரமங்கை
இதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக இருந்த குறுநில மன்னர்களை ஒருங்கிணைத்து, 7 வருட போராட்டங்களுக்கு பிறகு சிவகங்கை சீமையை வெற்றிக்கரமாக மீட்டெடுத்தார் வீரமங்கை வேலுநாச்சியார்.. சிவகங்கைச் சீமையில் இருந்து வெள்ளையர்களை விரட்டியடித்த முதல் வீரப் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும் ஆனார்.. அதுமட்டுமல்ல, நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணியும் வேலுநாச்சியார் தான்.
பெண்மணி
இப்படிப்பட்ட பெண்மணியை யாரென்றே தெரியாது என்று சொல்லி இருக்கிறது நம் மத்திய அரசு.. டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடக்க போகிறது.. வழக்கமாக, இந்த விழாவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.. அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தலைவர்களை நினைவுகூர்ந்து அல்லது தேசபக்தியை விளக்கும் வகையில் இந்த அலங்கார ஊர்திகள் அலங்கார செய்யப்படுவது வழக்கம்.
வஉசி
அந்த வகையில், இந்த முறை தமிழக அரசின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள் தயாரானது.. ஆனால், அவை நிராகரிக்கப்பட்டுள்ளது.. பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், இவர்களைப் பற்றி சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனவும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நிராகரிப்பு
தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4வது சுற்று வரை சென்ற நிலையில், அவை அனைத்துமே நிராகரிக்கப்பட்டுள்ளது... காரணம், வஉசி, வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்கிறார்கள்.. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் அதனால்தான் இத்தகைய தலைவர்களை தங்களுக்கு தெரியாது என்றும் சொல்லி மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம் தந்துள்ளதாக தெரிகிறது.
பாரதியார்
மேலும், கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், வ.உ.சி, வேலுநாச்சியார் இவர்கள் எல்லாம் தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடி ட்வீட்
ஆனால், இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 3-ம் தேதி வேலுநாச்சியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.. அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.. இது தொடர்பாக ஒரு ட்வீட்டும் பதிவிட்டிருந்தார்.. வீரமங்கை ராணி அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
பிரதமர்
ஒரு நாட்டின் பிரதமரே வேலுநாச்சியார் யார் என்பதை அறிந்து வாழ்த்து தெரிவிக்கும்போது, அவரது தலைமையிலான மத்திய அரசு, வேலுநாச்சியார் என்றே தெரியாது என்று சொல்லி இருப்பது அதிர்ச்சியை தந்து வருகிறது.. வேலுநாச்சியார் பற்றி பிரதமர் மோடி போட்ட வாழ்த்து, அதிகாரிகளுக்கு தெரியாவிட்டாலும், வ.ஊ.சி வேலு நாச்சியார் ஆகியோருக்காக மத்திய அரசு ஏற்கனவே தபால் தலைகளை வெளியிட்டுள்ளது.. இது எப்படி அதிகாரிகளுக்கு தெரியாமல் போகும் என்ற கேள்வி எழுகிறது.
திட்டங்கள்
அதுமட்டுமல்ல, மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களும், அறிவிப்புகளும் வெளிவரும்போது அதில் தொடர்ந்து தமிழ் மொழியும், தமிழக மக்களும் புறக்கணிப்பதாக விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.. அதேசமயம், தமிழகத்திற்கு வரும்போது மட்டும், தேவைக்கு ஏற்ப திருக்குறளையோ, சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள்காட்டி பேசும் பாஜக தலைவர்கள், தமிழ் மொழி, தமிழ்நாடு என்று வரும்போது அதை கண்டுகொள்ளாமல் நாசூக்காக தவிர்ப்பதும் நடைமுறையாகி வருகிறது..
சமூக நீதி
இதைபற்றி சமூக ஆர்வலர்கள் நம்மிடம் சொல்லும்போது, "மொழி, சமூக நீதி ஆகிய இரண்டிலும் திராவிடத்துடன் முற்றிலும் முரண்படுகிறது பாஜக.. எல்லோரும் சமம் என்ற கோட்பாடு அவர்களுக்கு எப்போதும் ஒவ்வாத ஒன்றாகவே இருந்து வருகிறது.. இந்த தேசம் முழுவதும் காலூன்றிய பாஜகவால் தமிழகத்தில் நுழைய முடியாததற்கு காரணம் திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கோட்பாடுதான் என்ற எரிச்சலும் உள்ளுக்குள் இருக்கவே செய்கிறது.. அதன் வெளிப்படாக வேலுநாச்சியார், வஉசி வாகன புறக்கணிப்பு இருக்கலாம்..
காழ்ப்புணர்ச்சி
தமிழகம் என்றில்லை, தென்மாநிலங்களை பொறுத்தவரை கர்நாடகத்தை தவிர, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.. இல்லாவிட்டால், மேற்கு வங்கத்தில் சுபாஷ் சந்திர போஸின் வாகனத்தையும் தடை செய்திருப்பார்களா?இதற்கெல்லாம் காரணம் காழ்ப்புணர்ச்சி தவிர வேறென்ன சொல்வது.. விடுதலை போரில் எப்பேர்ப்பட்ட தியாகத்தை செய்திருந்தாலும், என்னென்ன சிறை தண்டனைகளை அனுபவித்திருந்தாலும், இந்த நாட்டுக்காக உயிரையே தந்திருந்தாலும், அதை தீர்மானிப்பது இந்திய அரசியலின் வாக்கு வங்கிதான் போலும்.." என்கின்றனர் ஆதங்கத்துடன்.."